தருமபுரி மாவட்டம் புலிகரை பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் (55)-கந்தம்மாள் தம்பதிக்கு  பிரேம்குமார் (30), ரஞ்சித்குமார் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். தனது மகன்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.  ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணன் சூது, மது பழக்கத்தால், மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் புலிகரை அருகே உள்ள தோட்டத்தில் கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

 

இந்த விசாரணையில், கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம், சீட்டாடும் பழக்கம் இருந்துள்ளது. இதை மனைவி மற்றும் மகன்கள் கண்டித்து உள்ளனர். அப்போது குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மனைவி கந்தம்மாளை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த கந்தம்மாள் தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மூத்த மகன் பிரேம்குமார் கம்மாளப்பட்டியிலும், இளைய மகன் ரஞ்சித்குமார் கோவையிலும் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இதனால் தனிமையில் இருந்த கிருஷ்ணன் தனது விருப்பப்படி வாழ்ந்து உள்ளார். அப்போது அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 

 இந்நிலையில் கடந்த வாரம் கந்தம்மாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 மகன்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் புலிகரை அருகே கிருஷ்ணன் வசித்து வந்த தோட்டத்திற்கு, மகன்கள் பிரேம்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் சென்று, தந்தையிடம் நியாயம் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது தந்தைக்கும், மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் மற்றும் அவர்களுடன் வந்த 2 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கிருஷ்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணனின்  பிரேம்குமார், ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் மதிகோன்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். தருமபுரி அருகே குடும்பத்தை கவனிக்காததால் ஆத்திரத்தில், மகன்கள் இருவரும் தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.