தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பாஜக தலைவர் அண்ணாமலை செய்த விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். 

 


நான் ஒருவர் வீட்டில் சூடம் ஏற்றியது பற்றி பேசவில்லை. மதசார்பற்ற  நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். ஒரு அரசு என்பது அனைவருக்குமான அரசாங்கமாக இருக்க வேண்டும். நான் என் கொள்கை பிடிப்பில் வலுவாக இருந்து வருகிறேன். அண்ணாமலை கர்நாடகாவில் இருக்கும் பொழுது நான் ஒரு பெருமைக்குரிய கன்னடியன் என்று பேசிவிட்டு, தமிழ்நாட்டில் மாற்றி பேசுகிறார். நான் என்னுடைய கொள்கையில் பிடிப்போடு இருக்கிறேன். மதசார்பற்ற அரசு என்பது மதச்சார்பற்ற அரசாங்கமாக இருக்க வேண்டும். வீட்டில் சூடத்தை ஏற்றும் இடத்திற்கு நான் செல்லவில்லை. ஆனால் ரோட்டில் மதத்தை கொண்டு வரும்போது நான் எனது ஆட்சபனையை தெரிவிக்கிறேன்.

 

பெரியார் சாதித்தது என்னவென்றால், தமிழகத்தில் ஒரு சாதிக் கட்சித் தலைவர்கள் கூட, பெயருக்கு பின்னால் சாதியை குறிப்பிடுவதில்லை. இது மூன்று தலைமுறையாக தமிழகத்தில் இருந்து வருகிறது. இது மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் பெரியார் சாதித்துக் காட்டியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் கூட பேசி வருகிறேன். என் தாத்தாவின் பெயருக்கு பின்னால் சாதி அடையாளம் இருந்தது. ஆனால் என் அப்பா, நான்,  அடுத்தது எனது மகன் எங்களது பெயர்களுக்கு பின்னாடி சாதி அடையாளங்கள் இல்லை. இதைத்தான் மற்ற மாநிலங்களிலும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். அதேபோல் மற்ற தலைவர்களை சொல்லும்போது கூட சாதிப் பெயர்களை குறிப்பிடாமல் தான் சொல்கிறோம். மனிதர்களை மனிதர்களாக பார்ப்போம். அவர்களது மனித தன்மையை மட்டும் பார்ப்போம் என வலியுறுத்தி வருகிறோம்.

பாஜக தருமபுரியில் 14 வார்டுகளில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளார்கள். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அந்த கட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து தான் நிர்ணயிக்கும். அண்ணாமலை தலைமையேற்ற பிறகு பாஜக தருமபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்து, டெபாசிட் இழந்துள்ளது.

 

பாஜகவிற்கு நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன்.  பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திரா தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக செய்தி வழியாக தெரிந்து கொண்டேன். இதை வரவேற்கிறேன். பாஜக தலைவர் அண்ணாமலையை தருமபுரியில் வந்து போட்டியிடட்டும்.  திமுக வேட்பாளர் யாராக இருந்தாலும், பாஜகவை எளிமையாக தோற்கடிப்போம். மேலும் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன். பிரதமர் வேட்பாளர் நரேந்திரா தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, தருமபுரி தொகுதியில் போட்டியிட்டாலும் சரி,  அவரை திமுக தோற்கடிக்கும் என்பதை சேலஞ்சாக சொல்கிறேன் எனத் தெரிவித்தார்.