சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சேலம்,  நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர்   எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் பிரச்சினைகளை அமைச்சர் கேட்டிருந்தார். முன்னதாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்களிடம் அந்தந்த மாவட்டங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


கூட்டததிற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அவர், தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க 2 வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்  என்றும் குறிப்பாக சேலம்  உளுந்தூர்பேட்டை நான்கு வழி  சாலை 20 இடங்களில் இரண்டு வழி சாலையாக உள்ளதாகவும், இதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் . என்றும் உறுதியளித்தார். தமிழகம் முழுவதும் 25 இடங்களில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் குறித்து பொறியாளர் குழு ஆய்வு செய்து வருவதாகவும், இந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும்,10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராம சாலைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.




தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். எட்டுவழிச்சாலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எட்டுவழிச்சாலை என்பது கொள்கை முடிவு எனவே அதுகுறித்து  முதலமைச்சர் அறிவிப்பார் என்று பதிலளித்தார். மேகதாது அணை பற்றிய கேள்விக்கு, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகள் குழு மத்திய அரசை சந்திக்கச் சென்று உள்ளது அவர்கள் சந்தித்த பிறகு முதல்வர் அது குறித்துப் பேசுவார் என்று கூறினர். அங்கிருந்து சென்ற அமைச்சர் சேலம் மத்தியில் 7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலத்தை பார்வையிட்டார். பின்பு தலைவாசலில் அமைய உள்ள கால்நடை பூங்காவை ஆய்வு செய்தார்.