பெரும்பாலை அருகே மேட்டூர் அணைக்கு நிலம் வழங்கியவர்கள் வசிக்கும் பகுதியில் வனத் துறையினர் மரக்கன்று நட குழி வெட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

 

தருமபுரி மாவட்டம் நாகமரை அருகே வசிக்க மக்களை, 1925-ம் ஆண்டு  மேட்டூர் அணை கட்டும் பொழுது, அப்புறப்படுத்தி, பெரும்பாலை அருகே உள்ள சாமத்தாள், கொம்பாடியூர் உள்ளிட்ட இடங்களில் அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 100 ஆண்டுகள், நான்கு தலைமுறையாக இந்த பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்களுக்கு சுமார் ஒன்று முதல் மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இந்த மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு, குடும்ப அட்டை,  ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இந்த முகவரியில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வனத்துறை சார்பில் மரக்கன்று நடுவதற்காக குழிகள் வெட்டப்பட்டு வருகிறது. இதில் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் வசிக்கின்ற விவசாய நிலங்களிலும் மரக்கன்று வைப்பதற்காக வனத் துறையினர் குழி எடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தாங்கள் மேட்டூர் அணை கட்டுவதற்கு உரிய இடம் வழங்கியதால் அரசு அப்போது தங்களுக்கு இந்த இடத்தை ஒதுக்கி உள்ளது. அரசு ஆவணங்களிலும் தங்களிடமும் இந்த இடத்திற்கான உரிய ஆவணங்கள் இருந்து வருகிறது. எனவே இந்த இடத்தில் வசிக்கும் மக்களை, இந்த இடத்தில் விவசாயம் செய்யவும், வசிக்கவும் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் இந்த இடம் முழுவதும் வனத்துறைக்கு சொந்தமானது இங்கே வன விரிவாக்கம் செய்யப்படுவதால் இந்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு செல்லுமாறு தெரிவித்து வந்துள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த சாமத்தாள் மற்றும் கொம்பாடியூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவில் தங்கள் சுமார் நூற்றாண்டுகளாக, நான்கு தலைமுறைகளாக வசித்து வருகிறோம். தங்களை இந்த இடத்தில் இருந்து வெளியேற்றும் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.



 

நல்லம்பள்ளி அருகே சிவப்பு சந்தன மரத்தோட்டப் பகுதியில் வனத்துறையின் சார்பில் "பசுமை தமிழகம்" இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை  மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

 

பசுமை தமிழகம் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம்,  நல்லம்பள்ளி வட்டம், சாமிசெட்டிபட்டி ஊராட்சி, எள்ளுக்குழி  - சிவப்பு சந்தன மரத்தோட்டப் பகுதியில் வனத்துறையின் சார்பில் "பசுமை தமிழகம்" இயக்கத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை ஆட்சியர் சாந்தி மனக் கன்று நட்டு வைத்து, மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

 

இதனை தொடர்ந்து பேசிய ஆட்சியர் சாந்தி, தருமபுரி மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் சாதாரண மழைப்பொழிவு முறைகளைப் பாதுகாப்பதிலும் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 



 

"பசுமை தமிழகம்" இயக்கத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் மரம் நடுதல் மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிதைந்த வனப்பகுதிகளை மீட்டெடுப்பது. விவசாய நிலங்களில் பொருத்தமான விவசாய-சில்விகல்ச்சர் மாதிரியுடன் மர இனங்களை நடுதல். மக்கள் நடமாட்டம் மூலம் சமுதாய நிலங்கள், குளத்தின் முகப்பு, தரிசு நிலங்கள், வழித்தடங்கள், கால்வாய் கரைகள் போன்ற பொது நிலங்களில் நடவு செய்தல். ஆகிய பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர், எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.