Crime: சேலத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சில் ஈடுபட்ட இருவர் கைது - 5 பேரிடம் விசாரணை!

ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசிச்சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

சேலம் மாநகர் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். இன்று அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த சம்பவத்தை கண்ட எதிர்வீட்டு நபர் தியாகராஜன் என்பவர் ராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராஜன் வீட்டிற்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் சேகரித்து வருகின்றனர். 

Continues below advertisement

இந்த நிலையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளான முகமது ஆரிப், முகமது இஸ்மாயில் உட்பட 7 பேர் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வைத்து சேலம் மாநகர ஆணையாளர் நஜ்மல் ஹோதா விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இதனிடையே தகவல் அறிந்து வந்த பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியை சார்ந்தவர் அம்மாபேட்டை காவல் நிலையம் முன்பாக கூடி வருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் இன்றி தடுப்பதற்கு அதிரடி காவல் படையினரும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து முஸ்லிம் அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அம்மாபேட்டை பிரதான சாலையில் அமர்ந்து நூற்றுக்கு மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் படுத்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சையது அலி மற்றும் காதர் உசேன் இருவர் பெட்ரோல் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டதால் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது தீ வைத்தல், நட்பெயருக்கு களங்கம் விளைவித்தல் மற்றும் மத நல்லினத்திற்கு எதிராக செயல்படுத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் அம்மாபேட்டை காவல் நிலையம்முன்பாக பரபரப்பான சூழல் நிலவுகிறது.

 

கோவை, மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் வீடுகளில் குண்டு வீச்சு சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக நேற்று சேலம் மாவட்டத்தில் உளவுத்துறையின் தகவலின் படி பல்வேறு தங்கும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பாஜக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை தொடர்ந்து சேலத்திலும் வீசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola