தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், தொப்பூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பொம்மிடு உள்ளிட்ட பகுதிகளில் பல பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழிகொண்டு, அரளி உள்ளிட்ட பூ வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்கள் அனைத்தும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூக்கள் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை இல்லாமல் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி பூக்கள் சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால் பூக்களை வாங்க ஆளில்லாமல், கேட்பாரற்று விலை குறைந்து விற்பனையானது. தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கியதால், சனிக்கிழமை விரதம் இருப்பதால், பூக்களின் தேவை அதிகரிக்கும், பூக்களின் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால்  புரட்டாசி முதல் சனி கிழமை நாளாக இருந்தும் பூக்களின் விலை உயராமல், கடந்த சில நாட்களாக விற்பனை வேலையிலிருந்து உயரவில்லை. இன்றைய பூக்கள் சந்தையில் குண்டு மல்லி கிலோ ரூ.260, கனகாம்பரம் கிலோ ரூ.500, சன்ன மல்லி கிலோ ரூ.280, அரளி கிலோ ரூ.120, பட்டன் ரோஸ் கிலோ ரூ.80, தாமரை ஒரு மொட்டு ரூ.20, சம்பங்கி ரூ.70, செண்டுமல்லி ரூ.30, சாமந்தி பூ ரூ.60 ரூபாய் என விற்பனையானது.  கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைந்து விற்பனையானது. ஆனால் இன்றும் பூக்களின் விலை உயராததால், விவசாயிகள் மிகுந்த ஏமாற்றும் அடைந்துள்ளனர். மேலும் அடுத்த வாரம் இரண்டாவது சனி என்பதால், சற்று பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரியாகள் தெரிவித்தனர்.



 

 

தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாதங்களில் இறைச்சி உண்ணாமல் விரதம் இருந்து வருகின்றனர். புரட்டாசி முதல் சனிக் கிழமை என்பதால், தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அமோகமாக இருந்தது. நேற்று மட்டும் 130 விவசாயிகள் கடை போட்டு இருந்தனர். இதில் 7868 நுகர்வோர் வருகை புரிந்தனர். மேலும் பழங்கள் காய்கறிகள் என மொத்தம் 39 டன் எடையுள்ள காய்கறிகள் 13 இலட்சத்திற்கு விற்பனையானது. பொதுமக்கள் ஏராளமானோர் காய்கறிகள் வாங்க குவிந்ததால் கிருஷ்ணகிரி- தருமபுரி சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.