மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியைத் தாண்டியுள்ள நிலையில், மேட்டூர் அணையையொட்டி காவிரிக் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து உபரிநீர் அதிகளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த 27-ந் தேதி, 71 வது முறையாக எட்டியது. 



இதனிடையே நேற்று முதல் டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. எனினும் வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் மேல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை கடந்த நிலையில், இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேட்டூர் 120 அடியை எட்டும்போது உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்பதால் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் நகராட்சி சார்பில் உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், தூக்கனாம்பட்டி, மாதையன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் காவிரிக் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு ஒன்றரை லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பட்டச் சான்றிழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.


இதனிடையே டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், நண்பகல் 12 மணி முதல் 20 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறப்பு அதிகப்படுத்தப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம். எனவே காவேரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.