சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. மாங்காய்களை ரசாயனம் கலந்த ஸ்பிரே தெளித்து பழுக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்தந்த மாவட்ட பழ வியாபாரிகளிடம் எச்சரித்தும், குடோன்களை கண்காணித்தும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் பழைய, புதிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆத்தூர், மேட்டூர், வனவாசி, தலைவாசல், ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள குடோன்களில் பழங்கள் இந்த முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என்று உணவு பாதுகாப்பு அலுவலர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக ரசாயன ஸ்பிரே தெளித்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, சேலம் மாவட்டம், நங்கவள்ளி வட்டாரத்தில் உள்ள வனவாசி பகுதியில் 2 குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகா ரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, செயற்கை முறையில் பழக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 120 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. எதெஃபான் வேதிபொருள் 3.8 லிட்டர் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், அந்த 2 குடோன்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பழ குடோன்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சைனாகல், கார்பைடுகல், எதெஃபோன் மூலம் பழுக்க வைக்கப்படும் மா, வாழைப் பழங்கள் தான் தற்போது விற்பனை வருகிறது. கார்பைடு கல்லில் இருக்கக்கூடியது அசிட்டிலீன் வாயு. இந்த வாயுவின் மூலம் மா, வாழை போன்றவற்றை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் அவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்து விடும். மேலும், எதெஃபான் மூலம் மாங்காய்கள் மீது ஸ்பிரே அடித்து பழக்க வைக்கப்படுகிறது. அவசர அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில் வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர். இதுபோன்று செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப் பையும் பாதித்து புற்று நோயை ஏற்படுத்தும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படலாம் என்று கூறினார்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டம் முழுவதும் பழக் குடோன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.