சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.


முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ”தேர்தல் பணிகளை 6 மாதத்திற்கு முன்பே துவங்கி விட்டோம். மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை ஆத்தூர் தலைவாசல் வரை கொண்டு செல்ல வேண்டும். காலநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தால் வரும் காலம் சோதனை காலமாக வரப்போகிறது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு இப்படித்தான் இருக்கும். எனவே நீர் வரும்போது நீரை சேமிக்க வேண்டும். சேலத்தில் உள், வெளி வட்ட ரிங்ரோடு அமைக்க வேண்டும். சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க கூடாது. இரும்பாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அந்த நிலத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும், இல்லையென்றால், தமிழக அரசு மாற்று திட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்றார்.



”கர்நாடகாவிடம் தண்ணீருக்காக தமிழக அரசு பிச்சை எடுத்து வருகிறது. கொள்ளிடத்தில் 10 தடுப்பணைகளை கட்ட வேண்டும். ஆனால், தமிழக அரசு 10 மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. தமிழகத்தில் ஆவின் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். தமிழகத்திற்கு என்எல்சி தேவை இல்லை. தமிழகத்தில் இருந்து என்எல்சியை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், என்எல்சிக்கு தமிழ்நாடு அரசு அடிமையாக உள்ளது. பசுமை எரி சக்தி போன்ற திட்டங்களை உலக நாடுகள் முன்னெடுத்து வந்துள்ளன. சூரிய சக்தி, காற்றாலை, நீர் மூலமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்தாமல், விவசாயத்தை அழித்து மின் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று கூறினார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது” என தெரிவித்தார்.



”ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அரசு நியமித்துள்ள குழு, பரிந்துரையை பதிவு செய்த பிறகு, பாமகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தலில் வந்தால, வாக்கு இயந்திரம் பற்றாக்குறை ஏற்படும். நாடளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, விரைவில் அறிவிக்கப்படும். 2026 இல் கூட்டணி ஆட்சிதான் அமையும். இது எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வியூகம் வகுக்கப்படும். விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை” என்றார்.


நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. தரமான மருத்துவர்களை நீட் தேர்வு உருவாக்கவில்லை. வணிக கல்வி முறையையே இது ஊக்குவிக்கிறது என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், கொள்ளிடம் விவகாரத் தொடர்பாக பாமக சார்பில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார். பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது பதியப்பட்டுள்ள வரதட்சனை புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், யார் மீது வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். வழக்கு விசாரணை முடிந்த பிறகு கட்சி சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பெரியார் பல்கலைக்கழகத்தின் அரங்குகள் வாடகைக்கு விடப்படுவது குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்த அவர், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை மாற்ற வேண்டும். பல்கலைக்கழக கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கு பதில் கல்யாண மண்டபம் நடத்தி விடலாம் என்று பேசினார்.