கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிற நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி  தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு கடந்த இரு தினங்களுக்கு முன்பு 17,651 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியில் தற்போது 116.44 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 15,730 கன அடியாக உள்ள நிலையில் விநாடிக்கு 10,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போது 83.45 அடியாக நீர்மட்டம் உள்ளது.  அணைக்கு நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை நிலவரப்படி கர்நாடக அணைகளிலிருந்து, காவிரி ஆற்றில் வினாடிக்கு 22,900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


  

இதனை தொடர்ந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து கடந்த 10 நாட்களாக குறைந்து வந்தது.  நேற்று காலை வினாடிக்கு 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.

 

ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அருவிகளில் அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லாமல், வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 22,900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து நீர்வரத்து குறித்து  மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



 

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை  திறக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி நீரானது திறக்கப்பட்டது.