சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி ஏரியில் 10 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தடுப்பு வேலி அமைக்காமல் ஏரியை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் குழந்தை உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.



சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஏரி அருகே கோடிபள்ளம் பகுதியில் முருகன், நித்தியா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களது கடைசி மகள் தீபிகா தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் காலைக்கடன் கழிப்பதற்காக சென்ற நீண்ட நேரம் ஆகியும் குழந்தை திரும்ப வராத நிலையில் சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் பெற்றோர் தேடி வந்துள்ளனர். அப்போது பள்ளப்பட்டி ஏரியின் அருகே குழந்தையின் செருப்பு இருப்பதை கண்டு தண்ணீரில் தேடிப் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்ததையடுத்து குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உடலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்து செல்லும் போது உறவினர்கள் கதறிக்கொண்டு ஆம்புலன்ஸ் பின்பு ஓடிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.



இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரியை மேம்படுத்தி, நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் வேகமாக நடைபெறாததால், சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஏரியை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வதற்கு முன்பாக சுற்றியும் வேலி அமைத்து பணியை மேற்கொண்டு இருந்தால் குழந்தையின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. மேலும் இப்பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திறந்தவெளியில் காலைக்கடன் செல்வதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 


சேலம் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப் படாத நிலையில் பல இடங்களில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படுகின்றன. இதனால், உடனடியாக சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் , பல்வேறு இடங்களில் தோண்டப்பட்டுள்ள குழிக்கு பாதுகாப்புடன் பணிகளே நடத்த வேண்டும் என்று சேலம் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.