சேலம் மாவட்டத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 10-ஆம் தேதியன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் வாயிலாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.



தமிழகம் முழுவதும்  கொரோனா தடுப்பூசி செலுத்த நான்கு  சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாளை மறுநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 5 ஆவது சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வரும் 10-ஆம் தேதி 1392 மையங்களில் நடைபெற உள்ளதாகவும், இந்த மெகா தடுப்பூசி முகாமின் வாயிலாக 2 லட்சத்து 10 ஆயிரம்  பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


சேலம் மாவட்டத்தில் இதுவரை 61 சதவீதம் பேருக்கு  தடுப்பூசி  போடப்பட்டுள்ளதாகவும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதை பரவலாக்க வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள்  பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி பணியை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மெகா தடுப்பூசி முகாம் பணியில் 18,525 பேர் ஈடுபட உள்ளனர். சேலம் மாவட்டத்தில் போதுமான அளவு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கையிருப்பில் உள்ளது. உரிய தேதியில் பொதுமக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படும். சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 82 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். சேலம் மாநகராட்சி பகுதியில் 62 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.


சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்ததற்கு அதிக அளவிலான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளதே காரணம். பிற மாவட்டங்களில் உள்ளதுபோல பரிசுப் பொருட்களை வழங்கியோ, ஒரு பொருளை வாங்குவதற்கு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இதுவரை உருவாகவில்லை எனும் அளவிற்கு பொதுமக்கள் ஆர்வத்தோடு தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன் வருகின்றனர். தினசரி ஒரு சதவீதம் தடுப்பூசி செழித்து வளரும் நிலையில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் ஒரே நாளில் 8% தடுப்பூசிகள் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் 80% தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் இலக்கை எட்ட பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கேட்டுக்கொண்டார். 



சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 பதவிகளில் 11 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மீதமுள்ள 24 பதவிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.