தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 7 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு  குண்டு மல்லி, ஊசி மல்லி, பட்டன் ரோஸ், கனகாம்பரம், முல்லை, சாமந்தி, செண்டு மல்லி, கோழி கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.



 

இங்கு அறுவடை செய்யும் பூக்கள் அனைத்தும் தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள மலர்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் இங்கு விளைவிக்கக் கூடிய பூக்கள் ஓசூர், சென்னை, பெங்களூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மலர் மார்க்கெட்டில் தினசரி 10 டன் முதல் 20 டன் வரை பூக்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.



 

இந்நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே மலர் மார்க்கெட் சரியாக இயங்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பொது முடக்கம் முடிந்து மலர் மார்க்கெட்டுகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும் பூக்கள் விற்பனை என்பது மந்தமாகவே இருந்தது. தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி, தருமபுரி மலர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 



 

ஒரு கிலோ குண்டு மல்லி 200 ரூபாயில் இருந்து 800 ரூபாய்க்கும், ஊசி மல்லி  260 ரூபாயில் இருந்து 700 ரூபாய்க்கும், கனகாம்பரம் 300 ரூபாயில் இருந்து இரண்டு மடங்கு உயர்ந்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் சாமந்தி 70 ரூபாய், பட்டன் ரோஸ் 150 ரூபாய், செண்டு மல்லி 50 ரூபாய், ஒரு கட்டு ரோஜா 150 ரூபாய், காக்டா 320 ரூபாய், ஜாதி மல்லி 240 ரூபாய், அரளி 300 ரூபாய், சம்பங்கி 200 ரூபாய், நந்தி வட்டம்  300 ரூபாய்க்கு விற்பனையானது.



 

தொடர்ந்து கடந்த வாரத்தில் மலர்களை கேட்பதற்கு ஆளில்லாமல் விலை குறைவாக விற்பனையானது. ஆனால் நாளை நாளை மறுநாள் சுப முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை மற்றும் விலை அதிகரித்துள்ளது. கடந்த வார்ததை விட, மலர்களின் விலை ஒரு மடங்கு விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பூக்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.