காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடியிலிருந்து 1,75,000 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது.
 
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கபினியிலிருந்து வினாடிக்கு 25,000 கன அடியும், கிருஷ்ணராஜ் சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 78,000 கன அடி என தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,03,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால், சுமார் 70,000 கன அடிக்கு மேல் மழை நீரும் வருகிறது. இதனால் கடந்த மூன்று நாட்களாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கும் 2 லட்சம் கன அடியாக நீர் வரத்து இருந்தது.
 
 
 
இந்நிலையில் மழை சற்று குறைவாக பொழிவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடியிலிருந்து குறைந்து, வினாடிக்கு 1,75,000 கன அடியாக சரிந்துள்ளது. ஆனாலும்  ஐந்தாவது நாளாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒகேனக்கல்லில் அருவிகள், பாறைகள் என எதுவும் தெரியாத அளவிற்கு வெள்ளக் காடாய் காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 28 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் மழையின் தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கூடுதலாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒகேனக்கல், ஓட்டமலை ஆலம்பாடி, நாடார் கொட்டாய் பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஓசூர்-ஒகேனக்கல் பிரதான சாலையில் ஆலம்பாடி அருகே சாலையின் குறுக்கே தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.