தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி பகுதியில் சுமார் 1733 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. அதனையடுத்து சிப்காட் அமைக்க முதற்கட்டமாக அளவிடும் பணி நடைபெற்று வருகிறது.  அரசுக்கு சொந்தமான 1023 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ள நிலையில், மீதம் தேவைப்படும் நிலத்திற்காக விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 150 ஏக்கர் விவசாய நிலத்தை நில உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய தொகையை அரசு தரப்பில் வழங்க இருக்கிறது. அரசு அறிவித்தபடி சிப்காட் அமைக்க மீதம் தேவைப்பட உள்ள நிலத்தை அந்த ஒன்றியத்திற்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் உள்ள விவசாய பட்டா நிலங்களில் கையகபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

இதனையறிந்த விவசாயிகள், நிலம் அளவை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு அதிகாரிகள் தங்கள் நிலங்களை அளவிட வேண்டாம் என்றும், சிப்காட் அமைக்க தாங்கள், தங்ளது விவசாய நிலங்களை கொடுக்கமாட்டோம் என தெரிவித்து, கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து அரசு அதிகாரிகள் நிலம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் அமைக்க அரசுக்கு சொந்தமான நிலத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

 




ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, அதிகாரிகள் நிலம் அளவை செய்ய வந்ததால், விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாய நிலத்தை எடுக்க கூடாது என தனித்தனியாக  மனு கொடுக்க வந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டிருந்த மஞ்சள், கரும்பு, வாழை, நெல், வாழை, கடலை உள்ளிட்ட பயிர்களை கையில் எடுத்து வந்தனர்.

 

இதனையறிந்த அரசு அதிகாரிகள் அலுவலக வாயில் நிறுத்தி, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். தொடர்ந்து 183 விவசாயிகளிடம் மனுக்களை பெற்ற அதிகாரிகள், விவசாயிகளின் சார்பில் 5 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து சிப்காட் அமைக்க விவசாய நிலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்த மனு கொடுக்க வந்த விவசாயிகள் கையில் பயிர்களை எடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.