தமிழகத்தில் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மல்லர் கம்பம்,  கரலாக்கட்டை, தொங்கு இலை  உள்ளிட்டவைகள் சிறந்த முறையில் முற்காலத்தில் அனைவராலும் பின்பற்றப்பட்டு வந்தது. இது நாளடைவில் இதன் வளர்ச்சி குன்றி அடுத்துவரும் தலைமுறைகள் இது அறியாமலேயே போய்விடும் என்ற அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேளாண்மை பட்டதாரி இளைஞர் சண்முகம்.

 


 

இவர் தான் கல்லூரி படிக்கும் காலத்தில் பாரம்பரிய கலைகளின் மீது இருந்த ஆர்வத்தில் விழுப்புரம், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாரம்பரிய கலைகளை கற்று உள்ளார்.  ஆனால் நமது முன்னோர்கள் இந்த கலைகளை பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இரண்டு, மூன்று தலைமுறையாக இந்த கலைகள் அழிந்து கொண்டு வருகிறது.  இதனால் இந்த தற்காப்பு கலைகளை அடுத்து வரும் சந்ததிகளுக்கு புகைப்படம், வீடியோவாக காண்பிக்கக் கூடாது, பாரம்பரிய கலைகளில் கற்றுத் தேர்ந்தவர்களாக உருவாக்கி கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என எண்ணினார்.



 

இதனை அடுத்து தனது சொந்த கிராமத்தில் 5 ஆண்டுகளாக தற்காப்பு பயிற்சி பள்ளியை தொடங்கி, சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் மற்றும் தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார். மேலும் இந்த கலைகளோடு மல்லர் கம்பம் ஏறுதல், தொங்கு இல்லை அதில் பல சாகசங்கள் செய்தல்,  மனித உடல் இதுபோன்ற கலைகளை மேற்கொள்ளுமா? இப்படி வளையுமா? என்று தற்போது பார்க்கும் குழந்தைகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த பயிற்சிப் பள்ளியில் மாணவ மாணவிகள் பல்வேறு பாரம்பரிய கலைகளை கற்று தற்போது பல நிகழ்ச்சிகளில் செய்து காட்டியும் வருகின்றனர்.



 

அரசு பள்ளி மாணவர்களின் சிலம்பம், மல்லர் கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை பார்க்கும் போது அனைவரும் பயப்படுகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு தற்காப்பு கலைகளும் இங்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் கற்பித்து வரும் வேளாண் பட்டதாரி இளைஞர் சண்முகத்திற்கு போட்டியாக ஒன்றாம் வகுப்பு , இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களும் மல்லர் கம்பம் ஏறி அசத்தி வருகின்றனர். மேலும் பலூன்களில் தண்ணீர் அடைத்து வைத்து, சிறு குழாயில் ஊசியை வைத்து, 5 மீட்டர் தூரத்திலிருந்து ஊதி பலூனை உடைத்து அசத்துகின்றனர்.
  



 

இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பரபரப்பான நிலைகளில், கிடைக்கும் உணவுகளை உண்டு பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு நகராமல் அமர்ந்திருக்கும் நிலையில், மனித உடல் எவ்வாறு வளைகிறது, அந்த உடலின் பயன்கள் என்ன, அந்த உடலின் கட்டமைப்புகள் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை இந்த அரசு பள்ளி மாணவர்கள் செய்து காட்டுகின்றனர். இதை பார்க்கும் போது மனித உடலின் திறன், மனித உடலின் அழகு, மனித உடலின் ஆரோக்கியம் நமக்கு தெரிகிறது. இவ்வளவு அருமையான நமது பாரம்பரிய கலைகளை நாம் இழந்து வரும் நிலையில், ஆங்காங்கே சண்முகம் போன்ற இளைஞர்கள் மீண்டும் இந்த கலைகளை மீட்டெடுத்து வருகின்றனர்.

 



 

அழிவின் விளிம்பில் உள்ள ஆற்றல்மிகு சிலம்பு கலையை அரசு பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தற்காப்பு கலைகள், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உதவியாக இருக்கும். இதனை பெண்களுக்கு கட்டாயமாக பள்ளிகளில் கற்று தர வேண்டும். அதனால்  அரசு பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முறையாக சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் மாணவர்களுக்கு சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், இப்பயிற்சி மையத்தின் ஆசிரியர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.



 

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் ஏறுதல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அப்போதைய அரசர்கள் இதை பின்பற்றி வந்துள்ளனர்.  அரிய வகையில், பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையிலும், இந்த மல்லர் கம்பம் ஏறுதல் நிகழ்ச்சி அமைந்துள்ளது. வீரமிக்க, தைரியம் மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டுமென்றால், இது போன்ற கலைகளை நாம் உறுதியாக மீட்டெடுக்க வேண்டும். இந்த நவீன யுகத்தில் பல்வேறு உடற்பயிற்சி உத்திகள் வந்திருந்தாலும், செயல்பாட்டில் இருந்தாலும், நமது பாரம்பரிய இந்த வீர விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பு பெற்றவை.



 

மேலும் காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பயிற்சிகளிலும் இந்த கலைகளை புகுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த கலைகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.