தருமபுரி: பாலக்கோடு அருகே விவசாய நிலத்திற்கு சட்ட விரோதமாக மின்வேலி அமைத்ததில், உயிரிழந்த காட்டுப் பன்றியை இறைச்சி வெட்டிய இருவரை வனத் துறையினர் கைது செய்தனர்.

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சட்ட விரோதமாக விவசாய நிலங்களை சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் 3 காட்டு யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனப் பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் வனத் துறையினரும், மின்சாரத் துறையினரும் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளி கிராமத்தில் வனத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது விவசாய நிலத்தை சுற்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து, அதில் சிக்கி உயிரிழந்த காட்டுப் பன்றியை இறைச்சி வெட்டியவர்களை வனத்துறையினர் பிடித்தனர். 



 

தொடர்ந்து வனத் துறையினர் நடத்திய விசாரணையில், விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் காட்டுப்பன்றி சிக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து சிவப்பிரகாசம், கௌரன் ஆகிய இருவரையும் வனத் துறையினர் கைது செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து, காட்டு பன்றி உயிரிழப்பிற்கு காரணமான இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர். தொடர்ந்து வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கிலும், உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற வகையில் சட்ட விரோதமாக மின்வெளி அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.