நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் எதிர்கால தண்ணீர் தேவையை உணர்ந்து, ஊர் ஊராக சுற்றி பனை விதைகளை சேகரித்து 2000 பனை விதைகளை ஏரியில் நடவு செய்யும் தருமபுரியைச் சார்ந்த பீனிக்ஸ் தன்னார்வ அமைப்பினர்.

 

தருமபுரி அடுத்த பாடி கிராமத்தில் பட்டதாரி இளைஞர் கோவிந்தசாமி என்பவர் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு பினிக்ஸ் என்ற தன்னார்வ அமைப்பினை உருவாக்கி, கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த பீனிக்ஸ் குழுவினர் மழைக் காலங்களில் மரக் கன்றுகளை நடுவதும், வெயில் காலங்களில் மரக் கிளைகளில் அமரும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுப்பதும், தண்ணீர் தேவையை உணர்ந்து வருங்கால சந்ததியினருக்கு நிலத்தடி நீர்மட்டம் குறித்தும் அதன் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, நீர் நீர்நிலைகள், ஏரிகள், குளம், குட்டைகளில் பண விதைகளை நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



 

இந்த பீனிக்ஸ் குழுவில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி நேரங்கள் தவிர்த்து மற்ற ஓய்வு நேரங்களில் மரக் கன்றுகளை நடுவது, தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதன் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில், தண்ணீர் வற்றி வருகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பனை மரங்களில் இருந்து பழம் பழுத்து கீழே வரும் காலம் என்பதால், தொடர்ந்து பருவ மழையும் தொடங்கியுள்ள நிலையில், இந்த பீனிக்ஸ் குழுவினர் ஏரிகளில் பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டு தொடங்கியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாடி, பாப்பாரப்பட்டி, பூகாம்பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பத்தாயிரம் பனை விதைகளை நட்டு, தற்பொழுது விதைகள் வளர தொடங்கியுள்ளது. 

 

இந்நிலையில் இந்த ஆண்டு பத்தாயிரம் பண விதைகளை நடுவது என்ற இலக்கு நிர்ணயித்து கடந்த ஒரு மாத காலமாக கிராமங்களில் உள்ள பனை மரங்களை நாடி, ஊர், ஊராக சுற்றி திரிந்து, விதைகளை சேகரித்து வைத்துள்ளனர். தற்பொழுது முதல் கட்டமாக 2000 பனை விதைகளை ஏரிகளின் கரைகளில் நடவு செய்யும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த சேகரித்த பண விதைகளை பிரித்து பாடி ஏரிக்கரைகளில் முழுவதுமாக பீனிக்ஸ் தன்னார்வ குழுவினர் மூலம் குழிகளை வெட்டி ஒவ்வொரு குழிகளிலும் மூன்று பனை விதைகளை நட்டு வருகின்றனர். இந்தப் பணியில் பீனிக்ஸ் குழுவைச் சார்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமோடு விடுமுறை நாட்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



 

மேலும் ஏரிக்கரைகளில் பனை விதை நடுவதன் மூலம் பனை விதைகள், வளர்ந்து மரமான பின்பு, நிலத்தடியில் எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் இருந்தாலும் அதனை ஈர்த்து மேலே கொடுக்கும். அதே போல் நம் பாரம்பரிய பனை மரங்கள் வேர் முதல் நுனி வரை அனைத்து பகுதிகளும் நமக்கு பயன்படுகின்ற வகையில் இருக்கிறது. இதனால் இந்த பனை விதைகளை நடும் பணியில் பீனிக்ஸ் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு ஏரி குளம் குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் பனை விதைகளை நட்டு வளர்த்து பராமரிப்பது மூலம் வருங்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள முடியும். இந்த பீனிக்ஸ் குழுவினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட பனை விதைகள், தற்பொழுது வளர்ந்து செடிகளாக வருகிறது. எனவே நீர் நிலைகளை பாதுகாக்கவும், வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தண்ணீரை சேகரிப்பதற்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் பனை விதை நடுவதை ஒரு பெரிய இயக்கமாக மேற்கொள்ள வேண்டும் என பீனிக்ஸ் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.