தருமபுரி மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதி நிறைந்த மாவட்டமாகும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் அதிகப்படியாக வாழ்ந்து வருகிறது. அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் யானை, மான், சிறுத்தை, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து பயிர்களையும் கால்நடைகளையும் சேதப்படுத்துவது வழக்கம். அவ்வாறு வரும் விலங்குகளை பாதுகாப்பாக வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் மாரண்டஹள்ளி அடுத்த மலைப் பகுதியை ஒட்டியுள்ள சாமனூர், படகாண்டஹள்ளி, கொக்கிகல் மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகளை அடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென அருகில் உள்ள மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்ததை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்துள்ளனர். அதனையடுத்து அதனை உற்று பாரத்த போது அது சிறுத்தை என தெரிய வந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 



 

இதனையடுத்து பாலக்கோடு வனத் துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சிகள் குறித்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்டஹள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத் துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், மேலும் வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சிறுத்தையின் கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவது, இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக வனப் பகுதிக்குள் செல்லக்கூடாது.

 

மேலும் கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்க வேண்டும். அதேபோல் வன விலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சாரம் வைப்பது, நாட்டு வெடி குண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். அப்போது வனத் துறையினரிடம் பொதுமக்கள் கிராமத்திற்குள் இதுவரை சிறுத்தை வரவில்லை எனவும், எந்த கால்நடைகளையும் இதுவரை சேதப்படுத்தவில்லை கிராமத்தை ஒட்டி சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அச்சமாக உள்ளது என தெரிவித்தனர்.