பென்னாகரம் அடுத்த ஏரிமலை கிராமத்திற்கு சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர்.

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மூன்று கிராமங்களுக்கும் முறையான சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் அடிப்படை தேவைகளுக்கு மலையை விட்டு கீழே இறங்கி வருவதற்கு முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மூன்று மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவம், பள்ளி உள்ளிட்ட தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல், சாலை வசதி வேண்டி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மக்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏற்படுத்தி தர முடியாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த கிராமமக்கள் ரேசன் பொருட்கள், விவசாய விளை பொருட்கள், வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்களை கழுதை மீது வைத்து எடுத்து சென்றனர்.

 

இந்நிலையில் அரசு மலை கிராமத்திற்கு சாலை அமைத்து கொடுக்காததால், கிராம மக்களே ஒன்றிணைந்து மண் சாலை அமைத்து, சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் மழை வருகின்ற பொழுது இந்த மண் சாலை முழுவதுமாக மண் அரிப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் வனத்துறை சாலை அமைக்க அனுமதி கொடுத்தால், மத்திய, மாநில அரசுகள் சாலை வசதி செய்து தர முடியும். இதனால் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் மனு கொடுத்தும், போராடியும் வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்ட வனத் துறை சார்பில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம், இன்று முதல் முறையாக மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏரிமலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கு வனத் துறை அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர். மேலும் நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆன நிலையிலும் தங்களது கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத இருப்பதால், உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே ஏரிமலை முதல் சீங்காடு வரை தார் சாலை அமைக்க வனத் துறை அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது குறைகள் குறித்த புகார் மனுக்களை வழங்கினர்.