தருமபுரி நான்கு ரோடு அருகில் நவீன வசதிகளுடன், ஆவின் பாலகம் பூங்கா வசதியுடன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த ஆவின் பாலகத்திற்கு காலை, மாலை, இரவு நேரங்களில் டீ மற்றும் காபி, பால் அருந்த, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து, பூங்காவில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பூங்காவில் மின்விளக்கு எரியாமல், போதிய பராமரிப்பு இல்லாமல், சுகாதாரமற்ற முறையில் இருந்துள்ளது. 

 



 

இதனையறிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், காலையிலே ஆவின் பாலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது பாலாகத்திற்கு முன்பு சுகாதாரமற்ற முறையில் முகம் சுழிக்கும் வகையில், துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தானே அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட ஆவின் ஊழியர் ஒருவர் வந்து, அந்த இடத்தை சுத்தம் செய்ய செய்தார். அப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் ஊழியருக்கு உதவியாக சுத்தம் செய்யும் வரை தண்ணீரை ஊற்றினார். இதனையடுத்து இந்த நவீன ஆவின் பாலகத்தை நன்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். அதேபோல் பூங்காவை சீர் செய்து சிறுவர்களும், பொதுமக்களும் அமரும் வகையில் சுகாதாரமாக பாதுகாத்து,  தேவையான மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஆவின் பாலகத்தை ஆய்வு செய்ய வந்த சட்டமன்ற உறுப்பினர், தானே பாலகத்தை சுத்தம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 9,500 கன அடியாக அதிகரித்தது.

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருவதால்,  நீர்வரத்து  படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையன  பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 8,000 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில்  தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 9,500 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. கடந்த 6 மாதத்திற்கு பிறகு நீர்வரத்து 10,000 கன அடிக்கு கீழ் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.