தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாய விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மாவட்டம் இங்கு பல்வேறு வகையான காய்கறிகள் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் எல்லோரும் எல்லா விவசாயிகளும் ஒரே மாதிரியான காய்கறிகள் பூக்களை சாகுபடி செய்ததால் சில நேரங்களில் விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்து அறுவடை மற்றும் பராமரிப்பு செலவிற்கு கூட வருவாய் இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாற்று பெயரை சாகுபடி செய்ய வேண்டும் என யோசித்த, பாலக்கோடு அருகே உள்ள புலிகரை கிராமத்தை சேர்ந்த விவசாயி வேடியம்மாள் என்பவர், தனது நிலத்தின் ஒரு பகுதியில் கோவக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு  60 சென்ட் பரப்பில் 540 செடிகளை தேனி மாவட்டத்திலிருந்து நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்துள்ளார்.

 

மேலும் நடவு செய்த ஓரிரு வாரத்தில் செடிகள் புது தளிர் விடத் தொடங்கி, 60-வது நாளில் செடிகளில் பூ, பிஞ்சுகள் விடத் தொடங்குகிறது. வறட்சியான பகுதிகளில் வளரக்கூடிய இந்த கோவக்காய்க்கு,  சொட்டுநீர் பாசனம் மூலம் வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் கொடுத்து வருகின்றனர். ஆனால் செடிகளை நடவு செய்யும் முன்பாகவோ அல்லது நடவு செய்த உடனேயோ வயல் முழுக்க கற்களை நடவு செய்து, பந்தல் மேற்பரப்பு 5 அடி உயரத்திற்குள் அமைத்துள்ளனர். அப்போது தான், காய்களை பெண்கள் அறுவடை செய்வது எளிதாக இருக்கும். இந்த பந்தலுக்காக நடப்படும் கற்களுக்கு இடையே இழுத்துக் கட்டப்படும் கம்பிகள், கொடிகளுக்கு வலிமையாக இருக்கும். அவ்வாறு இல்லையென்றால், மழையின்போது செடிகளின் பாரம் அதிகரித்து பந்தல் தரையோடு சரிந்து விட வாய்ப்புள்ளது.



 

மேலும், கோவக்காய் செடிகளை சராசரியாக பராமரித்தால் 5 ஆண்டுகள் வரையும், இயற்கை உரம் கொண்டு  முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரையும் விளைச்சல் தரும். இந்த காய் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளதால், மருத்துவ குணம் வாய்ந்த கோவக்காயை, உண்பவர்களின் நலன் கருதி இந்த விவசாயி மீனமிலம், பூச்சு விரட்டி போன்றவைகளை தெளித்து, இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் 2 ஆண்டுக்கு ஒருமுறை செடிகளுக்கு கவாத்து செய்வது, தொடர்ந்து தரமான காய்களை விளைவிக்கினாறனர். இந்ந கோவக்காய் சாகுபடிக்கு செம்மண் மிக பொருத்தமானது. மேலும் வண்டல், களிமண் நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். ஆனால், சவுளு மண் எனப்படும் களர் நிலங்களில் தொடர் மழைக் காலங்களில் செடிகள் இறந்து விடுகின்றன.



 

மேலும், வாரம் ஒருமுறை வயல் முழுக்க அறுவடை செய்தால் சராசரியாக 300 கிலோ காய்கள் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.60 வரை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை கிடைக்கிறது. இதனை தரம் பிரித்து முதல் ரகத்தினை விமான மூலமாக சிங்கப்பூர் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் இரண்டாம் ரகத்தினை  ராயக்கோட்டை பகுதியில் விற்பனை செய்கின்றனர். அங்கிருந்து சென்னை, கேரளா, பெங்களூருவுக்கு அனுப்புகிறார். தற்போது ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் அறுவடை மற்றும் பராமரிப்பு செலவு என இருப்பதால், 20 ரூபாய்க்கு விற்பனையானால், நல்ல வருவாய் கிடைக்கும். இந்த பயிர் வறட்சியான தருமபுரி மாவட்டத்திற்கு ஏற்ற பயிராக இருப்பதால், இதனை மற்ற விவசாயிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும். மேலும் இதற்கு பந்தல் அமைக்க ஒரு லட்சத்திற்கு மேல் செலவாவதால், இதற்கு தோட்டக்கலைத் துறை மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.