தமிழக அரசு ஆண்டுதோறும் நியாய விலை கடைகளில் அரிசி, சர்க்கரை, வெள்ளம், முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு, கரும்பு, உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களை பொங்கல் தொகுப்பாக வழங்கி வந்தது. தற்போது இந்தாண்டு பொங்கல் தொகுப்பாக நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் கரும்பு இடம்பெறாததால், கரும்பு விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

 

இதையடுத்து பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வலியுறுத்தி, கடலூர், தஞ்சை, மதுரை போன்ற மாவட்டங்களில் பொங்கல் தொகுப்பு நம்பி கரும்பு பயிர் செய்த விவசாயிகள், கரும்பை கையில் வைத்துக் கொண்டு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொங்கல் தொகுப்பில் கரும்பு, வெள்ளத்தை வழங்க வேண்டும். கூடுதலாக தேங்காய் வழங்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதனை கண்டித்து பாஜக விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக, பாஜக தலைமை அறிவித்தது. அதனை அடுத்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமையில், செங்கரும்பை கையில் வைத்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரையுடன், ஆயிரம் ரூபாய் பணம் மட்டும்  வழங்குவதாக அறிவித்துள்ளதை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனை நம்பி கரும்பு பயிரிட விவசாயிகள், உருண்டு வெல்லம் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என முழக்கங்களை எழுப்பினர்.



 

மேலும் வெள்ளம், கரும்பு, தேங்காய் உள்ளிட்டவைகளை சேர்த்து பொங்கல் தொகுப்பாக வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு, திமுக அரசை கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருபுறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மறுபுறம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் ஆண்கள் தாங்கள் கொண்டு வந்த கரும்பை போட்டி போட்டுக் கொண்டு உடைத்து எடுத்துச் சென்றனர். சிலர் அங்கேயே கரும்பை சுவைத்து கொண்டிருந்தனர்.