சேலம் மாவட்டம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1367.47 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் ரூ.235.82 கோடி மதிப்பிலான 331 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.170.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.


பின்னர் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மலைக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நேரு, இன்று சேலத்தில் மக்கள் கோட்டையை கூட்டியிருக்கிறார். நவீன தமிழ்நாட்டினை உருவாக்கிய சிற்பி கலைஞர். அவருக்கு நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டிருக்கிற நேரத்தில் சேலம் மாநகரில் கலைஞர் சிலையை திறந்து வைத்துவிட்டு ஒரு மன நிறைவோடு வந்திருக்கிறேன். சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 2019-ம் ஆண்டு திமுக சார்பில் கலைஞர் சிலை திறக்கப்பட்டிருக்கிறது. இப்போது மாநகராட்சி சார்பில் அண்ணா பூங்காவில் கலைஞர் சிலை திறக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் பூங்காவில் பூத்த மலர்தான் கலைஞர். சேலத்திற்கும் கலைஞருக்குமான நட்பு அன்பான, குடும்ப நட்பு. கலைஞரை முழு கதை வசனகர்த்தாவாக மாற்றிய ஊர் சேலம். மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம், ரூ.500 சம்பளம் பேசி பணியாற்ற அழைத்தார்.


 


இங்கு பணியாற்றுவதால் கட்சிப் பணிகளுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று உறுதிமொழி வாங்கிய பின்னரே கலைஞர் பணியாற்ற ஒப்புக்கொண்டார். அப்போது வெளியான படம் மந்திரிகுமாரி. அப்போது 1949-ம் ஆண்டுதான் திமுக உருவானது. திமுக உருவான நிகழ்ச்சிக்கு சேலத்தில் இருந்துதான் கலைஞர் சென்னை சென்றார். அப்படி கலைஞரோடு பின்னி பிணைந்த ஊரான சேலத்தில், நூற்றாண்டு விழாவின் போது கலைஞர் சிலை முதன்முதலாக திறப்பது மகிழ்ச்சிக்குரியது. சேலம் மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் வந்ததை விட கூடுதல் திட்டங்களை சேலத்திற்கு கொண்டு வர உள்ளோம். 50 ஆண்டு கால கனவான சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், மகளிர் கலைக்கல்லூரி, ஆத்தூர் அண்ணா கலைக்கல்லூரி, ரூ.1,553 கோடி மதிப்பில் சேலம் உருட்டாலை, ரூ.134 கோடி மதிப்பில் அதி நவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கடந்த கால திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம். கலைஞர் ஆட்சிக்காலத்தில் இவையெல்லாம் கொண்டு வரப்பட்டன.


இந்த வரிசையில் தற்போதைய ஆட்சியும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,240 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தோம். கருப்பூரில் மினி டைடல் பூங்கா, வெள்ளிக் கொலுசு தொழிலுக்காக பன்மாடி உற்பத்தி மையம் அடிக்கல் நாட்டப்பட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்க ஜாகீர் அம்மாபாளையம் 110 ஏக்கரில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.880 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ரூ.52 கோடி மதிப்பில் மூன்று ஏரிகள் புனரமைக்கப்பட உள்ளது. அம்மாபேட்டை பகுதியில் 120 கோடி மதிப்பில் ரயில்வே பாலங்கள் அமைக்கப்படும். 20 கோடி மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு மையம் அமைக்கப்படும். மேட்டூர் அருகேயுள்ள பாலமலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த அரசை பொறுத்தவரை சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஆட்சி அமைந்தபிறகு மாவட்டங்கள்தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சுற்று நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. சேலம் 2-ம் சுற்று நிகழ்ச்சி நடக்கிறது. இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டம் 650 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 778 குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைக்கும். முதல்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்பட்டுள்ளது.


 


அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் ரூ.11 கோடி முறை கட்டணமில்லா பேருந்து வசதியை மகளிர் பயன்டுத்தியுள்ளனர்.  7,599 மாணவ-மாணவியர் காலை உணவு திட்டத்தின் கீழ் பயனடைகின்றனர். தமிழக அளவில் அதிக எண்ணிக்கையாக ரூ.17 ஆயிரம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் உதவித் தொகை பெற்று வருகின்றனர். உழவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்து குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 3வது ஆண்டாக குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. நானும் டெல்டாக்காரன் என்பதால் மகிழ்ச்சியடைகிறேன. சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.


 10 ஆண்டுகாலம் தமிழ்நாடு பாழ்பட்டு கிடந்தது.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முந்தைய அதிமுக ஆட்சி பல்வேறு திட்டங்களில் கையெழுத்திட்டனர். கண்ணை மூடிக்கொண்டு நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டதால்தான் நிதி நெருக்கடியில் தவிக்கிறோம். உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான் மின்கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழல் உள்ளது. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. நிதி இல்லை என்று காரணம் காட்டி புதிய திட்டங்கள் அறிவிக்காமல் இல்லை. 5 ஆண்டுகள் அறிவிக்க வேண்டிய திட்டங்களை 2 ஆண்டுகளிலேயே அறிவித்துள்ளோம். இதனால் நம்பர் 1 தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்துள்ளது. 


 முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதன் மூலம் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய மையமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளைப் போல இல்லாமல் தொழில் தொடங்க சூழல் இருப்பதை வெளிநாடுகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளோம். வளமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் நடைபோடுகிறது. இதை வெளிச்சம் போட்டு காட்டினால்தான் பல்வேறு நிறுவனங்கள் நம்மை நோக்கி வருவார்கள். ஆனால் அதைக்கூட தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் கொச்சை படுத்துகிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களால் அழிக்கத்தான் முடியும் ஆக்க முடியாது. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனநிலையில் இதை கடந்து செல்கிறேன். இவர்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை. மக்கள் பணியாற்றவே நேரம் போதவில்லை. மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். உங்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை இந்த திராவிட மாடல் அரசு செய்யக் காத்திருக்கிறது என்று பேசினார்.