சேலத்தில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சேலம் மாநகர் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர். வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளப்பட்டி மூன்று ரோடு பகுதியிலுள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல், உதயசங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றவே அந்தக் கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உதயசங்கரை சரமாரியாக வெட்டத் தொடங்கியது.


அப்போது உதயசங்கர் அருகிலிருந்த பேக்கரி கடைக்குள் வெட்டுக் காயங்களுடன் ஓடினார். ஆனாலும் அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பல், அவரை நடுரோட்டுக்கு இழுத்து வந்து சரமாரியாக வெட்டியது. இதில் உதயசங்கரின் தலை, கை, வயிறு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் உதயசந்திரன் தாக்கிய அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயசங்கரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


மேலும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேலம் மாநகர துணை காவல் ஆணையர் கௌதம் கோயல், உதவி ஆணையாளர் நிலவழகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் உதயசங்கரை வெட்டிவிட்டுத் தப்பி ஓடியது தெரியவந்தது.


சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மாலை நேரத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.