சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆயுத பூஜை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது கடைகள், அலுவலகங்களுக்கு மற்றும் வாகனங்களை சுத்தப்படுத்தி அதன்பின் ஆயுத பூஜையை கொண்டாடினர். ஆயுத பூஜை முன்னிட்டு சேலம் கடை வீதி, முதல் மற்றும் இரண்டாம், அக்ரஹாரம், செவ்வாய்பேட்டை, லீ பஜார், நான்கு ரோடு, ஐந்து ரோடு போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது தொழில் செய்யும் கருவிகளை கொண்டு பூஜையிட்டு வழிபட்டனர்.



இதேபோன்று, ஆயுத பூஜையையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. பண்டிகை காலம் என்பதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் பூஜைக்குத் தேவையான பூக்களை முன்னதாகவே வாங்கிச் சென்றனர். இருப்பினும் சேலம் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பண்டிகைக்காலம் என்பதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. குண்டுமல்லி ஒரு கிலோ 500 ரூபாயக்கு விற்கப்பட்ட நிலையில் பண்டிகை அன்று ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முல்லை 400 முதல் 500 ரூபாய்க்கும் விற்பனையானது. 


சேலம் கடை வீதியில் பொரி, பழங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொரி மற்றும் பழங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டாலும், விலை கடந்த ஆண்டு விட அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் குறைந்த அளவு பொருட்களை மட்டுமே வாங்கிச் சென்றனர் என வியாபாரிகள் கூறினர். பழங்களைப் பொறுத்தவரை ஆப்பிள் ஒரு கிலோ 80 முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி கிலோ 70 ரூபாய்க்கும், கொய்யா ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், திராட்சை ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வாழைக் கன்றுகள் ஜோடி 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளை ஜிகினா பேப்பர் என்று சொல்லக்கூடிய வண்ண பேப்பர்களை கொண்டு அலங்காரம் செய்தனர். கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



ஆயுத பூஜை பண்டிகைக்காக சேலம் சின்ன கடை வீதி, செவ்வாய்பேட்டை மற்றும் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருக்கும் மண்டிகளுக்கு சாம்பல் பூசணி அதிக அளவு வரவழைக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருந்து லாரி லாரியாக சாம்பல் பூசணியை வியாபாரிகள் வரவழைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆந்திராவைத் தவிர அரியலூர், அரூர், கரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் சாம்பல் பூசணி வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஒரு கிலோ சாம்பல் பூசணி ரூபாய் 20க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கிலோ ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரத்து அதிகரித்து இருந்தாலும், விலை சற்று அதிகரித்துள்ளதாகவும், ஆயுத பூஜை பண்டிகைக்காக சுமார் 100 டன் சாம்பல் பூசணி வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் சேலம் வியாபாரிகள் தெரிவித்தனர்.