தருமபுரி அருகே பிறந்த 7 நாளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த பெண் குழந்தையை வருவாய்த் துறையினர் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை- தர்மபுரியில் மீண்டும் கள்ளிப்பால் ஊற்றி பெண் சிசு கொலையா? குழந்தையின் பாட்டியிடம் காவல் துறை  விசாரணை. 

 

தருமபுரி அடுத்த மோட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல்-தேன்மொழி தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தேன்மொழி மீண்டும் கருத்தரித்த நிலையில், கடந்த 4ஆம் தேதி தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரசவம் முடிந்து தருமபுரி அருகே உள்ள முத்துக்கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் பெற்றோர் வீட்டில் தேன்மொழி, குழந்தையுடன் இருந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று முத்துவேல்-தேன்மொழி தம்பதியினரின் மூன்றாவது பெண் குழந்தை, நேற்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இறந்த பெண் குழந்தையை, சொந்த ஊரான மோட்டுபட்டி கிராமத்திற்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து பிறந்த 7 நாட்களில் பெண் குழந்தை சந்தேகமான முறையில் உயிரிழந்ததால் சந்தேகம் ஏற்பட்ட கிராம செவிலியர், குழந்தைக்கு விஷத்தன்மையுள்ள பால் போன்ற திரவ பொருட்களை கொடுத்து இருக்கலாம் கொலை செய்திருக்கலாம் என தருமபுரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

 


 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி நகர காவல் துறையினர் மற்றும் தருமபுரி வட்டாட்சியர் ராஜராஜன், மருத்துவர் மதன் உள்ளிட்டோர் குழந்தையை தோண்டி எடுத்து, அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இதனையடுத்து தேன்மொழியின் தாயார் உமா மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முத்துவேல் தேன்மொழி தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை விஷம் கொடுத்தோ அல்லது கள்ளிப்பால் போன்றோ விஷத்தன்மையுள்ளை திரவ பொருளை கொடுத்து கொலை செய்திருக்கலாம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

தொடர்ந்து தேன்மொழியின் தாயார் உமாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தருமபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை அதிகமாக நடைபெற்றதால், முதன்முதலாக தருமபுரி மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.