புகைப்படங்களை பார்த்து பெயர்களை விரைவாக கூறி சிறுவயதிலேயே 13 விருதுகளை தன்வசமாக்கி உள்ளார். சேலத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் தேஜஸ். சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என சமகாலம் வரையிலான 102  பிரபலங்களின் பெயர்களை புகைப்படங்களை பார்த்த உடன் கடகடவென 2 நிமிடம் 46 விநாடிகளில் கூறி இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார்.



சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்-நந்தினி தம்பதியின் மகனான தேஜஸ், சிறுவயதிலேயே புகைப்படங்களை பார்த்து அதனை விளக்கி கூறும் ஆற்றலை பெற்றுள்ளார். சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் தங்களுக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் சூழல் ஏற்பட்ட போது தனது மகனின் தனித்திறனை உணர்ந்த்ததாக கூறுகிறார் தேஜஸின் தாய் நந்தினி.


இரண்டு வயதிலேயே தான் பார்க்கும் புகைப்படங்களை மறவாமல் மனதில் நிறுத்திக் கொண்ட தேஜஸின் தனித்திறனை மெருகேற்ற முனைந்தனர் பெற்றோர். அதன் விளைவாக கடந்த ஒராண்டில் தமிழ்ப் பல்கலைகழகத்தில் சிறப்பு டாக்டர் பட்டம் உள்ளிட்ட 13 சாதனை பதக்கங்களையும் சான்றிதழ்களையும் சிறுவன் தேஜஸ் தன்வசமாக்கியுள்ளான்.


சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என சமகாலம் வரையிலான 102  பிரபலங்களின் பெயர்களை புகைப்படங்களை பார்த்த உடன் கடகடவென இரண்டு நிமிடம் 46 விநாடிகளில் கூறி சாதனை படைத்ததுடன் 51 வகையான வண்ண மீன்களின் பெயர்களை ஒரு நிமிடத்திலும், பத்து வகையான நாய் இனங்களை 23 வினாடிகளிலும், பத்து நாடுகளின்  நாணயச் சின்னங்களை 7 வினாடிகளிலும், 19 மனித உறுப்புகளின் பெயர்களை 26 விநாடிகளிலும் தனது மழலை மொழி உச்சரிப்பில் கூறி அசத்தி உள்ளார். வெறும் பெயர்களை உச்சரிப்பது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பிரபலங்களுக்கு பின்னால் இருக்கும் சாதனைகளையும் சிறிதுசிறிதாக தேஜஸுக்கு விளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தாய் நந்தினி.



கொரோனா  ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் கற்ற பாடங்களை மாணவர்கள் மறந்துவிட்ட நிலையில். நேரத்தை சிறிதும் வீணடிக்காமல், கிடைத்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக்கி சாதனை படைத்துள்ள சிறுவன் தேஜஸ் மற்றும் அவனது பெற்றோர் பலருக்கும் ஒரு உதாரணமாய் திகழ்கின்றனர்.