தருமபுரி மாவட்டத்தில் வருகிற ஞாயிற்று கிழமை 5-வது கொரோனா தடுப்பு செலுத்திக் கொள்ள மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர்  ச.திவ்யதர்சினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, தருமபுரி மாவட்டத்தில் மொத்த மக்கள் 16 இலட்சம் பேர் உள்ளனர். இதில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள தகுதியான 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 12.03 லட்சம் பேர் உள்ளனர். தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் 7,08,262 பேர் என, சராசரியாக 59 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சீரிய முயற்சி கொரோனா தடுப்பூசி செலுத்தும், 4 மெகா தடுப்பூசி முகாமில் 1,53,203 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

 

நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமிற்கு 97,000 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இந்த தடுப்பூசி முகாமில், முதல் தவணை தடுப்பூசி 15.07.21 முன்னாடி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாம் தவனை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். எனவே இந்த முகாமினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

தருமபுரி மாவட்டத்தில் நாளை ஒரு சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி,  அரூர் பகுதிகளை உள்ளடக்கிய 18-வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் 89 வாக்கு சாவடி மையத்தில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குச் சாவடி மையங்களில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 14 இடங்களில் உள்ள 21 வாக்குச் சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளை ஒரு மாதங்களாகவே காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதில் 50 சதவீத வாக்குச்சாவடி மையங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், வீடியோ கிராபர்கள் தயார் செய்யப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

மேலும் தென்பெண்ணை ஆற்றில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில், வெள்ள பெருக்கு பாதிப்புகள் ஏதுமில்லை. ஆனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கே.ஈச்சம்பாடி அணை கட்டியிருந்த தண்ணீர் திறப்பது குறித்து, நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.