கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சேலம் மாநகர காவல்துறை மற்றும் சேலம் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்டம் முழுவதும் 40 ஐந்து காவல் நிலையங்கள் உள்ளது. இதில் 7 காவல் நிலையங்கள் மலைப்பகுதிகளை ஒட்டிய இடங்களில் உள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் கல்வராயன்மலை, ஜவ்வாதுமலை, பச்சமலை, கொளத்தூர்பகுதி ஆகிய இடங்களில் கண்காணிப்பில் தீவிரபடுத்தி தனிக்குழு அமைக்கப்படவுள்ளது



கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் பிறமாவட்டங்களின் எல்லைப்பகுதி உள்ளதால் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு சோதனைக் குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் மற்றும் மாநகர் காவல்துறையினர் தனித்தனியாக புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர் காவல்துறையினர் தொலைபேசி எண் 9498162784 மற்றும் சேலம் மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண் 9489917188 தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் கள்ளச்சாராயம் தொடர்பான புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கள்ளச்சாராயம் எந்த இடத்தில் காய்ச்சினாலும், பதுக்கி வைத்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாநகரப் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வழக்குகளில் 14-05-23 ஆம் தேதி முதல் 256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுபானங்களை வாங்குபவர்கள் எது சரியானது என்பதை உணர வேண்டும், டாஸ்மாக் கடையில் முறைப்படுத்தப்பட்ட நேரத்தில் விற்பனை செய்யப்படுகிறது, மதுபானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததை அளவாக வாங்குவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது என்று கூறினார். இதுபோன்று விழிப்புணர்வு இல்லாமல் தவறான வழியில் சென்று தனக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்துவது 100 சதவீதம் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.



கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவலை யார் கொடுத்தாலும் 100 சதவீதம் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுடைய அறியாமையும் தவறான ஆசைகளும் தான் கள்ளச்சாராயம் உயிர் இழப்பிற்கு காரணம் என்றார். கள்ளச்சாரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த கேள்விக்கு, கள்ள சாராயம் தடுக்க பெண்களும் இதில் அக்கறை கொண்டு குடும்பத்திற்கு பொறுப்புடன் உள்ளவர்கள் விழிப்புணர்வு வேண்டும் ஆண்கள் கள்ளச்சாராயம் அருந்துவதற்கு அனுமதிக்க கூடாது. சிறிய பொழுதுபோக்கிற்காக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். கள்ள சாராயம் வாங்குபவர்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்காக உள்ளது. போதைப் பொருட்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இறங்குவதால் பள்ளி கல்லூரி முதல்வர்கள் மூலமாக ரகசியமாக தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைக்கும் தகவலை வைத்து போதைப் பொருட்களை விற்கும் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்துகள் வழங்கினால் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.