தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக யாரை தேசிய தலைமை நியமிக்கப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை பிடிக்க மூத்த தலைவர்கள் முதல் இளம் தலைவர்கள் வரை முட்டி மோதிக்கொண்டிருக்கும் நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.



தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி


ஜோதிமணிக்கான வாய்ப்பு குறைவு


ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், சசிகாந்த் செந்தில், செல்வபெருந்தகை என முதலில் பட்டியல் நீண்ட நிலையில், ஜோதிமணிக்கே காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டது. ராகுல் காந்தியின் பாத யாத்திரியை ஒருங்கிணைக்கும் நபர்களில் ஜோதிமணிக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. அதனால், வருங்கால காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்று அவருக்கு பலரும் அப்போதே வாழ்த்து சொன்னார்கள். ஆனால், கர்நாடகா தேர்தல் வேலைகளில் காங்கிரஸ் கட்சி பிசி ஆனதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நியமனம் தள்ளிப்போனது.



ஜோதிமணி


செல்வபெருந்தகை Vs சசிகாந்த் செந்தில்


இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பலர் போட்டியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் ஒதுக்கிட்டு செல்வபெருந்தகை மற்றும் சசிகாந்த் செந்தில் ஆகிய இருவரில் ஒருவரை காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமனம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே முடிவு எடுத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கனவே, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் சந்தித்து, அதில் குறிப்பிட்டதகுந்த வெற்றியையும் பெற்றிவிட்ட நிலையில், விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை அவரையே தலைவராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று அழகிரி ஆதரவாளர்கள் கார்கேவிடம் முறையிட்டுள்ளனர்.


பட்டியல் இனத்தவர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்பும் கார்கே


ஆனால், மல்லிகார்ஜூன கார்கேவோ இப்போதே காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமித்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என்றபோதிலும் சீனியர் முதல ஜூனியர் வரை பலரும் இந்த பதவியை பெற பல வழிகளில் முயற்சிப்பதால், யாரை தலைவராக நியமனம் செய்வது என்ற குழப்பத்தில் கார்கேவும் இருப்பதாக கூறப்படுகிறது.


இருப்பினும், தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கும்போதே குறிப்பிட்டத்தக்க மாநிலங்களில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை தலைவர் பதவிக்கு கொண்டுவந்துவிட வேண்டும், அவர்களை அதிகாரமிக்க பொறுப்புகளுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என கார்க்கே நினைப்பதால், தமிழ்நாட்டில் செல்வபெருந்தகை மற்றும் சசிகாந்த் செந்தில் ஆகிய இருவரில் ஒருவரே அடுத்த காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்படா அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.


கார்கேவின் சாய்ஸ் ‘செல்வபெருந்தகை’


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் நியமனத்தில் சோனியா, ராகுல்காந்தி பெரிதாக தலையிடாமல் மல்லிகார்ஜூனா கார்கேவே முடிவு செய்துக்கொள்ளட்டும் என ஒதுங்கி இருப்பதால், அவரின் சாய்ச்சாக உள்ள செல்வபெருந்தகையே அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.


இருப்பினும், கடைசி வரை தலைவர் பதவி கேட்டு மோதி பார்த்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜோதிமணி, கார்த்தி ப. சிதம்பரம் ஆகியோரும் உள்ளனர். இந்த இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு, செல்வபெருந்தகையை எப்படி காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மல்லிகார்ஜூனா கார்கே நியமிக்கப்போகிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.



கார்கேவுடன் ஜோதிமணி, செல்வபெருந்தகை


விரைவில் சந்தேகங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட  இருக்கிறார்.