தினமும் மீன் சாப்பிடுவதால் ஐஸ்வர்யா ராய் கண்கள் ஒளிரும் வகையில் இருக்கிறது என்று மகாராஷ்டிரா பழங்குடியின நலத்துறை அமைச்சர் விஜயகுமார் காவித் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை ஐஷ்வர்யா ராய் கண்கள் ஒளிர காரணம்


 நந்துர்பர் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் விஜயகுமார் காவித் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,  ''நான் உங்களிடம் ஐஷ்வர்யா ராய் பற்றி சொல்லியிருக்கிறேனா?தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் சருமம் மிகவும் மென்மையாக மாறும். கண் ஒளிரும். ஐஸ்வர்யா ராய் மங்களூரு கடற்கரைக்கு அருகில் வசித்து வருகிறார். அவர் தினமும் மீன் சாப்பிடுவார். அவர் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா... உங்களுக்கும் அவரைப் போன்ற கண்கள் வேண்டுமானல் உணவில் தினமும் மீன் இருக்கட்டும்.  மீனில் ஒரு வகை எண்ணெய் இருக்கிறது. அது தோலை மென்மையாக்குகிறது. மீன் சாப்பிடுவதால் உடலமைப்பு மிகவும் மெல்லியதாகத் தோன்றும்.” என்று நடிகை ஐஷ்வர்யா ராய் கண்கள் அழகாக இருக்க காரணம் என்ன என்பதை குறிப்பிட்டு பேசியுள்ளார்.


இவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இப்படி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ள 68 வயதான அமைச்சர் விஜய்குமாரின் மகள் ஹீனா காவித் பாஜகவின் மக்களவை உறுப்பினராக உள்ளார். மேலும், அமைச்சரின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது.


இவர் தெரித்துள்ள கருத்து பல்வேறு எதிர்வினைகளை பெற்று வருகிறது. அமைச்சர் ஒருவர் இப்படி கூறியிருப்பதற்கு,  பாஜக எம்.எல்.ஏ. நித்தேஷ் ரானே, “நான் தினமும் மீன் சாப்பிடுகிறேன். என் கண்கள் ஐஸ்வர்யா ராயுடையதைப் போல ஆக வேண்டும். இதைப் பற்றி ஏதாவது ஆராய்ச்சி இருந்தால் நான் காவித் சாஹிபிடம் கேட்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமோல் மிட்காரி," இதுபோன்ற அற்பத்தனமான கருத்துக்கலை தெரிவிப்பதற்கு பதிலாக, பழங்குடியினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.