திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப் ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 9 மாதங்களாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு பணியாற்றுகின்ற முதலமைச்சரை நாம் பெற்று இருக்கின்றோம். அவர் எப்போது தூங்குகின்றார், எப்போது விழித்து இருக்கின்றார் என்று எங்களை போன்ற சக அமைச்சர்களுக்கே தெரியவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முதலமைச்சர் என்னை தொலைபேசியில் அழைத்தார்.



அப்போது அவர் தேர்தல் குறித்து பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் மதுரையில் நூலகம் கட்டும் பணி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்று கேட்டார். குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை முடிப்பீர்களா என்று இரவில் கேட்கிறார் என்றால் முதலமைச்சர் தூங்குவதே இல்லை என்று தான் அதற்கு பொருளாக எடுத்து கொள்ள முடியும். ஜனநாயக ரீதியாக சொல்ல வேண்டும் என்றால் இப்போது தான் மக்களாட்சி நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இந்த திட்டம் தான், இந்திரா குடியிருப்பு திட்டமாக பின்னர் மாறியது தற்போது. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டமாக செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பியும் இந்திட்டத்தையும் மீண்டும் 2006 ஆம் ஆண்டு 5 ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர், குடிசைகள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதற்காக கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். தற்போது, 85 ஆயிரம் குடும்பங்களில், இடம் பெயர்ந்தோர் மற்றும் சொந்தமாக வீடு கட்டியவர்கள் போக 18 ஆயிரம் பேர் குடிசை வீடுகளில் உள்ளனர். எனவே, அவர்களுக்கு தற்போது வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குடிசையில் இல்லா நிலை உருவாக்க வேண்டும். அனைவரும் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் நடுநிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் செயல்பட்டு வருகின்றார் என இவ்வாறு அவர் பேசினார்.



முதலமைச்சர் பொது நிவாரண நிதி, முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள், பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதியுதவி வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல், அடுக்குமாடி குடியிருப்பு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என்பது உள்ளிட்ட 940 பயனாளிகளுக்கு ரூபாய் 16 கோடியே 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணிகலைமணி, அன்பரசி ராஜசேகரன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன், துணை இயக்குனர் சுகாதார செல்வகுமார், திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.