காங்கிரஸ் கட்சியில் விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விஜயதரணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் நட்டா தலைமையில் பிரதமர் மோடி வழிகாட்டுதல்படி இணைத்து கொண்டேன். பல ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன். ஆனால் அங்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன. பெண்களுக்கு உண்டான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. என்னை தவிர வேறு எந்த பெண்ணும் சட்டமன்ற உறுப்பினராக கூட ஆக முடியவில்லை. என்னை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு உள்ளது.


தேசிய கட்சியில் இருந்து இன்னொரு தேசிய கட்சிக்கு சென்றுள்ளேன். ஆனால் அதேநேரம் அங்குள்ள செயல்பாடுகள் பெரிய சங்கடங்கள், அரசியல் தளத்தில் பணியாற்றும் பெண்களுக்கு சிரமங்கள் தருகிறார்கள். 37 ஆண்டுகள் எந்த கட்சிக்கும் செல்லாமல் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினேன். ஆனால் இந்த முடிவிற்கு வந்திருப்பதே புரிந்து கொள்ள வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை பார்த்தேன். ஆனால் தலைமை பதவி என வந்தால் பெண்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் தவறானது. ஏன் பெண்களால் எதுவும் செய்ய முடியாதா? நிச்சயமாக முடியும். அதில் அவநம்பிக்கை கொண்டவர்கள் தான் காங்கிரஸ் கட்சி. கடந்த 7 ஆண்டுகளாகவே எனக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது. பாஜகவை பொருத்தவரை எவ்வளவு பெண் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இருக்கிறார்கள்? அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.


பெண்களுக்கும் தலைமை பண்பு இருக்கிறது என்பதை உணர்ந்த கட்சி பாஜக. அதன்வெளிப்பாடே எனது நிலைப்பாடுவிற்கு காரணம். அதனால் தான் என்னை பாஜகவில் இணைத்து கொண்டேன். பிரதமர் மோடி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்டமாக்கியுள்ளார். இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் பங்கு தந்துள்ளார். முத்தலாக்கை தடை செய்துள்ளார். அதனால் இஸ்லாமிய பெண்கள் பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள். அவர்கள் மனதை மாற்ற முடியாது. பெண்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் கொண்டு வந்த பிரதமர் மோடி தான், பெண்கள் மனதில் இருக்கிறார். பெண்களே வேண்டாம் என தூரத்தும் காங்கிரஸ் கட்சியில் எங்கு செயல்படுவது? இந்த முறையாவது காங்கிரஸ் 33 சதவீதம் பெண்களுக்கு சீட் தருவார்களா? பெண்கள் முன்னேற்றம் மிகவும் முக்கியம்.


தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் மத்திய அரசின் ரேசன் திட்டங்கள் கொண்டு சேர்க்கவில்லை. மக்களை சேர வேண்டிய விஷயங்களை அரசியல் கருதி தடுக்காதீர்கள். மக்கள் நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் திட்டங்கள் மக்களுக்கு சேரவில்லை. எப்படி கொண்டு சேர்ப்பது? அதனை பாஜக உடன் நான் சேர்ந்திருந்தால் தான் கொண்டு சேர்க்க முடியும். கன்னியாகுமரியில் நாற்கர சாலை திட்டம் நிறைவேற்றவில்லை. திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் ஆளுங்கட்சி உடன் இருக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையில் வெளிநாடுகளில் இந்தியர்கள் பெருமையாக வாழ்கிறார்கள். நாட்டின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக நினைக்கிறோம். ஆனால் மத்திய அரசின் திட்டங்கள் சேரவில்லை எனில், 10 ஆண்டுகளில் பின் தங்கி விடும். இது மக்கள் விரோத போக்கு.
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பதவி தருவதில்லை. பெண்களுக்கு பதவி தர மறுப்பது உண்மை தான்.


அண்ணாமலை யாத்திரை மற்றும் சீரிய முயற்சியால் பாஜக பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. அதுதான் என்னை போன்றவர்கள் பாஜகவில் இணைய காரணம். நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் கட்சியாக பாஜக வளர்கிறது. அண்ணாமலை தான் எதிர்கட்சியாக செயல்படுகிறார். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் விருப்பப்பட்டு தேசிய கட்சி என்ற முறையில் என்னை இணைத்து கொண்டுள்ளேன். பாஜகவில் யார் யார் எல்லாம் இணைகிறார்கள் என்பது எனக்கு தெரியாது.


காங்கிரஸ் கட்சியில் எதோவொரு வகையில் புண்பட்டதாலும், நாட்டிற்கும், மக்களுக்கும் பணியாற்ற முடியாது என்பதாலும் பலர் விலகுகிறார்கள். நிறைய பெண்கள் பாஜகவில் பயணிக்கும் வாய்ப்பு மேன்மேலும் அதிகரிக்கும். 37 வருடம் பணியாற்றிய காங்கிரஸ் கட்சி எனக்கு துரோகம் செய்தது. பெண் என்பதால் எனக்கு பதவி தரவில்லை. இப்போது டிவியில் பேட்டி தருகிறவர்கள், ஒரு போன் கூட பண்ணவில்லை. தவறு நடந்தால் தட்டி கேட்கும் ஆளாக இருந்திருக்கிறேன். எங்கு தவறு நடந்தாலும் தட்டிக் கேட்பேன். பாஜக என்னை ஆதரித்து, முக்கியத்துவம் அளிக்கிறது. எனக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பு தருவார்கள். எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் காணாமல் போகும் நிலையில் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் அழிவு பாதைக்கு செல்கிறது என்பதை சீமான் நன்கு புரிந்து கொண்டுள்ளார். வானதி சீனிவாசன் அகில இந்திய தலைவர். மக்கள் பிரச்சனையை நன்றாக பேசி கொண்டிருக்கிறார். சட்டமன்றம் செல்வதே மக்கள் பிரச்சனையை பேச தான். அங்கு சபாநாயகர் அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.