இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது. 


ராகுல் காந்தியுடன் கைக்கோர்த்த அகிலேஷ் யாதவ்:


அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கும் நோக்கில் ராகுல் காந்தி யாத்திரைக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், யாத்திரையில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க வைக்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


குறிப்பாக, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தொகுதி பங்கீடு இறுதி செய்த பின்னர்தான், யாத்திரையில் கலந்து கொள்வேன் என அகிலேஷ் யாதவ் கூறிவிட்டார். இறுதியில், இழுபறியில் இருந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பிரியங்கா காந்தி உதவியுடன் சுமூகமாக நிறைவடைந்தது.


அதன்படி, 80 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாகவும் மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சி போட்டியிட உள்ளதாகவும் 3 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றைய யாத்திரையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.


உ.பி-யை தெறிக்கவிட்ட யாத்திரை:


நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் ராகுல் காந்தி யாத்திரையில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. முன்னதாக, மேற்குவங்கம் வழியாக யாத்திரை சென்றடைந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா, அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டார்.


மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டாலும், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் INDIA கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொடர் இழுபறி நீடித்து வருகிறது.


 






மகாராஷ்டிராவை பொறுத்தவரையில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 40 தொகுதிகளில் எந்த கட்சி போட்டியிடுவது என இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், 8 தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர் பிரச்னை நீடித்து வருகிறது.