மதுரை பழங்காநத்தத்தம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. இதில் தி.க., தலைவர்  கி.வீரமணி, தி.மு.க., எம்.பி டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

வி.சி.க., தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பேசும்போது "சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் அறிவியல் சார்ந்து பேசுபவர்களுக்கும், புராணம் சார்ந்து பேசுபவர்களுக்கும் இடையே நடக்கும் கருத்தியல் போர் நடைபெறுகிறது.



இராமர் பாலம் விவகாரத்தில் இராமரை கொச்சைப்படுத்துவதாக விவகாரம் திசை திருப்பபட்டு வருகிறது. சேது சமுத்திரத் திட்ட வழக்கில் உச்சநீதிமன்ற புராதனம், நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் 80 % பேர் சனாதனத்திற்கு ஆதரவானவர்களே உள்ளனர். இராமர் பாலம் விவகாரத்தில் அறிவியல் பூர்வமாக எதும் நிரூபிக்கவில்லை.

 

சேது கால்வாய் திட்டம் நிறைவேறி இருந்தால் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கும். சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சட்டபேரையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மோடியின் முகத்திரையை பி.பி.சி கிழித்து வருகின்றது. மோடி அரசு குஜராத்தில் கொடூர கொலைகளை நிகழ்த்தி உள்ளது. குஜராத் படுகொலை தான் மோடியை தேசிய கதாநாயகனாக உயர்த்தியது. பா.ஜ.க., மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பற்ற முடியாது.



பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சட்டம் தூக்கி எறியப்பட்டு இந்தியாவில் அதிபர் முறை கூட வர வாய்ப்புள்ளது. பா.ஜ.க தி.மு.கவை தானே எதிர்க்கிறது என நாம் ஒதுங்கி செல்ல முடியாது. பா.ஜ.க., தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியலுக்கு ஆபத்து விளைவிக்க நினைக்கிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க, பாமக வழியாக பாஜக காலூன்ற நினைக்கிறது" என பேசினார்.