ஜூலை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க சாத்தியம் இல்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.


அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.  


இதனைத் தொடர்ந்து  நிகழ்ச்சி நடைபெறும் வானகரத்தில் சாலையின் இருபுறமும் தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் தனது காரில் புறப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சார வாகனத்தில் வானகரம் நோக்கி புறப்பட்டார். வழியில் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்ற நிலையில் இருவரின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. 


இதனைத் தொடர்ந்து உடனடியாக மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முதலில் வந்தார். மேலும் கூட்டம் நடைபெறும் அரங்கினுள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த போது ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதன்பின் பொதுக்குழு நிகழ்ச்சிகள் தொடங்கியது. அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு தீர்மானங்களை முன்மொழிய, அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிவதாக தெரிவித்தார்.


ஆனால் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான சி.வி.சண்முகம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே மற்ற தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அவைத்தலைவர் அறிவித்ததோடு கூட்டம் நிறைவடைந்தது.


மேலும் பொதுக்குழு கூட்டத்தில் பாதியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறினார். அவருடன் வெளியேறிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்  சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் பொதுக்குழு என ஆவேசமாக முழக்கமிட்டார். இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்தது செல்லாதது என்றும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடக்க சாத்தியமில்லை எனவும் கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், பொதுக்குழுவை கூட்ட அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை. அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பொதுக்குழு செல்லாததாகி விட்டது என தெரிவித்தார். இன்று கூட்டத்தில் கத்தியவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லை.கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என வைத்திலிங்கம் சரமாரியாக விமர்சித்தார். இன்றைய பொதுக்குழுவில் போலியாக கையெழுத்துப் போட்டு காட்டுமிராண்டி தனமான நடந்துள்ளனர். பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண