மகாராஷ்டிராவில் கொளுந்துவிட்டு எரியும் அரசியல் சர்ச்சைகளுக்கு இடையே சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சியை உடைக்க நினைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் உத்தவ் தாக்கரே.


அசாமில் அதிருப்தி எம்எல்ஏ.,க்களுடன் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனா மீது தன் ஆதிக்கத்தை படரவிட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா மாவட்டச் செயலாளர்களுடன் உத்தவ் தாக்கரே தீவிர ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், சிவசேனா கட்சியிலிருந்து வெளியேறுவதை உயிரை விடுவேன் என்று சூளுரைத்தவர்கள் தான் இன்று இங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவை உடைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஏக்நாத் ஷிண்டே என்னவெல்லாம் கேட்டாரோ அத்தனையும் நான் செய்து கொடுத்தேன். இருந்தும் என் மீது நினைத்துப்பார்க்க முடியாத அளவிலான குற்றங்களை அவர் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டேவிடம் நான் என்ன இலாகாவை வைத்திருந்தேனோ அதைக் கொடுத்தேன். அவரது மகனும் ஒரு எம்.பி. தான் ஆனால் அவர் எனது மகன் பற்றி குறை கூறுகிறார். அவர்களுக்கு துணிச்சல் இருந்தால் சிவசேனா பெயர் சொல்லாம், பாலாசாஹேப் பெயர் சொல்லாமல் மக்களை சந்தித்துப் பார்க்கட்டுமே.


கடந்த ஆண்டு எனக்கு செர்விக்கல் ஸ்பைன் அறுவை சிகிச்சை நடைபெற்றது. என் கழுத்து மட்டும் தலையில் வலி ஏற்பட்டது. என்னால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. எனது கண்களைக் கூட திறக்க முடியவில்லை ஆனாலும் நான் என் கடமைகளை செய்தேன். சிவாஜி மகாராஜ் தோற்றுப் போனாலும் கூட அவருடன் மக்கள் நின்றனர் என்று கூறினார்.
முன்னதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் பேசும்போது மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நிச்சயம் சிவ சேனா தனது பெரும்பான்மையை நிரூபிக்கும். அதிருப்தி எம்எல்ஏக்கள் தவறான முடிவை எடுத்துவிட்டனர். அவர்கள் மும்பைக்கு வருவார்கள் என நம்புகிறேன் என்று கூறினார்.




 


குழப்பமும் பாஜக மீதான புகாரும்:


மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில காலங்களாக பா.ஜ.க.விற்கும், சிவசேனாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில்,  முதல்வர் உத்தவ்தாக்கரே பா.ஜ.க. மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு நேற்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ நான் விரைவில் மகாராஷ்ட்ரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். என் உடல்நிலை குறித்து கவலைப்படும் எதிரணியினருக்கு பலத்தை காட்டுவேன். ஒரு காபந்து அரசாங்கம் இருப்பது போல நினைக்கும் அவர்கள்தான் ஒரு காபந்து எதிர்க்கட்சி. அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வார்கள்.


நாம் ஏன் பா.ஜ.க.வை விட்டு ஒதுங்கினோம். இன்று அவர்கள் காட்டுகின்ற வெற்று இந்துத்துவா என்பது அதிகாரத்திற்கான வேட்கையைத் தவிர வேறறொன்றுமில்லை. 25 ஆண்டுகளாக அவர்களுடன் கூட்டணி வைத்தது வீணானது என்ற எனது முந்தையை அறிக்கையை நான் இப்போதும் கடைபிடிக்கிறேன். 25 ஆண்டுகளாக நாங்கள் அவர்களை வளர்த்தெடுத்தது துரதிஷ்டவசமானது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.