வீக்கெண்ட் அரசியல்வாதி என்று தன் மீது வைக்கப்பட்டு வரும் விமர்சனத்துக்கு, விஜய் பதில் அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தனது இரண்டாம் தேர்தல் பரப்புரையை , நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் பகுதியில் இன்று (செப். 20) மதியம் பேசினார். அங்கே அவர் கூறியதாவது:
’’பெரம்பலூர் பகுதி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன் சீக்கிரமா உங்களைத் தேடி நான் வருவேன். மக்களை சந்திக்கும் பயணத்திட்டம் போடும்போது அது என்ன சனிக்கிழமை பயணம்? என்ற விமர்சனம் வந்தது.
ஒரே காரணம் இதுதான்!
உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால்தான் வார இறுதி நாளா பார்த்து மக்கள் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.
அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் ஓய்வு நாளாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தோம். என் மக்களை என் சொந்தங்களை சந்திப்பதில் எத்தனை கட்டுப்பாடுகள் அதற்கான காரணங்களைக் கேட்டால் சொத்தையான காரணங்களாக இருக்கும்.
மின் தடை, வயர் கட்
அதைப் பேசக்கூடாது இதைப் பேசக்கூடாது என பல்வேறு காரணங்கள். அரியலூர் செல்வதற்கு முன்பாகவே மின் தடை, திருச்சியில் பேசச் செல்லும்போது ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்.
பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, ஆர்எஸ்எஸ் தலைவரோ இங்கு வந்தால் இது போன்ற கண்டிஷனும், பவர் கட், ஒயர் கட் போன்றவற்றை செய்வீர்களா?’’
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
ஈழத்தமிழர்கள் நலன் எப்போது காக்கப்படும்?
முன்னதாக, ’’நான் என்றும் மீனவ மக்களின் நண்பன். மக்களோடு மக்களாக நிற்பவன். தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது எப்போது நிற்கும்? நம் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் நலன் எப்போது காக்கப்படும்? மீனவர் பிரச்சினைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, கடந்துபோகிறது திமுக அரசு.
மீனவர்களின் உயிர் எந்த அளவு முக்கியமோ அந்த அளவுக்கு இலங்கை தமிழர்களுடைய உயிரும் வாழ்வும் நமக்கு மிக முக்கியம். மற்ற மீனவர்கள் இந்திய மீனவர்கள் நமது மீனவர்கள் தமிழக மீனவர்கள் இப்படி பிரித்து பார்த்து பேசுவதற்கு நாம் பாசிச பாஜக இல்லை. நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதே நமது முக்கியமான எண்ணம்’’ என்று தவெக தலைவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.