மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, "பணம் இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று எனக்கு நம்பிக்கை இல்லை" என  தெரிவித்துள்ளார்.


பணம் மட்டுமே அரசியல் அல்ல:


தொடர்ந்து பேசிய அவர், "பணம் மட்டுமே அரசியல் அல்ல. அது ஒரு தவறான கருத்து" என கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.


ஆனால், மக்களுக்கு பணம் கொடுத்ததால் மட்டுமே அவர் வெற்றி பெற்றதாக தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 


இச்சூழலில், இதற்கு பதில் அளிக்கும் வகையில், கே.எஸ். அழகிரி பேசியுள்ளார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், "வைக்கம் நூற்றாண்டு விழா வருகிற 28ம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் ஈரோட்டில் இருந்து வைக்கம் வரை பிரம்மாண்ட ஊர்வலத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.


ஈரோட்டில் இருந்து வைக்கமுக்கு பேரணி:


கேரள காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இணைந்து பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணி வருகிற 28ம் தேதி ஈரோட்டில் இருந்து துவங்கி 30ம் தேதி வைக்கம் சென்றடையும். அதற்கான ஏற்பாடுகளை ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமைலான குழு ஏற்பாடு செய்து வருகிறது. 


அந்த பேரணியை நான் துவக்கி வைக்கிறேன் அந்தப் பேரணி வரலாற்று சிறப்புமிக்க பேரணியாக அமையும். தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பொழுது வைக்கதில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டார். அங்கேயே தங்கியிருந்து போராட்டம் நடத்தினார் சிறை சென்றார். 


அந்த போராட்டத்தில் காந்தியும் பங்கேற்றார். எனவே அந்த நினைவை போற்றுகிற வகையில் ஈரோட்டில் இருந்து வைக்கதிற்கு பேரணி நடைபெற இருக்கிறது" என்றார்.


இதையும் படிக்க: Annamalai: நான் கடன்காரனாக இருக்கிறேன்; முடிவு எடுக்க எனக்கு எந்த அதிகாரமும் இல்லை - அண்ணாமலை