TN Governor: இருமொழிக்கொள்கையால் மாணவர்கள் வாய்ப்புகளை இழப்புதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
மும்மொழிக்கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தென் தமிழ்நாட்டின் கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் தொடக்க நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர், MSME துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பல நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். ஏராளமான சிரமங்கள் மற்றும் முறையான தடைகள் இருந்தபோதிலும், அவர்களின் நேர்மறையான ஆற்றலும் நிறுவனமும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதைக் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி மனித மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனால் இது புறக்கணிக்கப்பட்ட கொல்லைப்புறம் போல் உணர்கிறது.
வாய்ப்புகளை இழக்கும் மாணவர்கள் - ஆளுநர் ரவி
தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய ஆற்றல் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே போதைப்பொருள்/போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. புதிய கல்விக் கொள்கை 2020 ஐ செயல்படுத்துவதற்கான பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதியின் இளைஞர்கள் வாய்ப்புகள் பெரிதும் இழந்ததாக உணர்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்திக்கு எதிர்ப்பு என்ற பெயரில் வேறு எந்த தென்னிந்திய மொழிகளையும் படிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையில் நியாயமற்றது. நமது இளைஞர்களுக்கு மொழியைப் படிக்க ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும்” என ஆளுநர் ஆர். என். ரவி பேசியதாக ஆளுநர் மாளிகையின் டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதலுக்கு மத்தியில் ஆளுநர் கருத்து:
புதிய கல்விக்கொள்கை திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய சுமார் 5 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்படமாட்டாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரித்துள்ளார். 5 ஆயிரம் அல்ல 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படாது மற்றும் இருமொழிக்கொள்கை தான் தமிழ்நாட்டில் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் மத்திய பாஜக அரசுக்கும், மாநில திமுக அரசுக்கும் இடையே கடும் கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தான், இருமொழிக்கொள்கையால் தமிழக மாணவர்கள் வாய்ப்புகளை இழப்பதாகவும், மற்ற மொழிகளை கற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர், இருமொழிக்கொள்கை விவகாரத்திலும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்.