தான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமாக சொத்து வைத்திருப்பதாக தி.மு.க.வினர் நிரூபித்தால், சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயார் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தி.மு.க. தலைமை ஐ.டி.யை குறிப்பிட்டு,  ”தி.மு.க.வினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள் வெளியிடுகிறேன். 














மேலும் 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் ஆகஸ்ட் 2011 முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.


அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?” 


என்ன நடந்தது?  


கோவையில் நேற்றைய தினம் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சமூக ஊடகங்களில் அவர் கையில் கட்டியிருக்கும் வாட்ச் விலை 3.5 லட்ச ரூபாய் என்ற தகவல் பகிரப்படுவது குறித்த கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அதற்கு “சமீபகாலமாக அரசியலில்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றது. கையில் கட்டி இருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய். ரபேல் விமானம் தயாரித்த நிறுவனம் தான் இந்த வாட்ச் செய்தார்கள். ரபேல் விமானத்தின் பாகத்தில் இருந்து மொத்தம் 500 வாட்சுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. 


ரபேல் விமானம்  ஓட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதான் இந்த வாட்சை கட்டி இருக்கின்றேன். இது 149வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும். நான் தேசியவாதி. அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கின்றேன்,  இது என் தனிப்பட்ட விஷயம்” என தெரிவித்திருந்தார். 


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் பிரான்ஸ் நிறுவனம் சார்பில் உலகளவில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ கட்டியிருக்கிறார்.


அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?” என கேள்வியெழுப்பியிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.