சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. கடந்த 20ஆம் தேதி நிதிநிலைக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.


முதலில் இரங்கல் தீர்மானத்தை சபா நாயகர் அப்பாவு வாசித்தார். அதில் மறைந்த பாடகி  வாணி ஜெய்ராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று கேள்வி நேரம் இல்லாமல், நேரமில்லா நேரம் முதலில் நடத்தப்பட்டது. அதில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது. முக்கியமாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், இதுவரை 41 பேர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்தார். 


இந்த தடை சட்ட மசோதா ஒரு மனதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.  இதனை முதலமைச்சர் மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கிறார்.


ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு அரசு போதிய விளக்கங்கள் அளிக்கவில்லை என கூறி திருப்பி அனுப்பியது பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தமிழ்நாடு அரசியலில் ஏற்படுத்தியது.


இதனிடையே இதை பற்றி விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர், ஆன்லைன் சூதாட்டம் பற்றி சட்டம் இயற்ற அரசியலமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் 34வது பிரிவின் அடிப்படையில் அனைத்து அதிகாரமும் உள்ளது என குறிப்பிட்டார்.


ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பிய நிலையில், கடந்த சில தனங்களுக்கு முன் முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இன்று நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இரண்டாவது முறையாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தார். ஆன்லைன் சூதாட்டம் மூலம் தமிழ்நாட்டில் பல உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக இந்த தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்முறை இந்த தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்பப்படுகிறது.