செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வருகை புரிந்து இருந்த திருமாவளவன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் நேரில் சந்தித்துக் கொண்டனர்.

 

பங்காரு அடிகளார் 


 

செங்கல்பட்டு (Chengalpattu News): மேல்மருவத்தூரில் திடீர் சந்தித்துக் கொண்ட திருமாவளவன் அண்ணாமலை பரஸ்பர நட்பு பரிமாறிக் கொண்ட காட்சி அனைவருக்கும் அதிசயத்தை உண்டாக்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் திரு பங்காரு அடிகளார் திடீர் உடல்நல குறைவு காரணமாக இறைவன் திருவடி அடைந்தார்.



 

அரசு மரியாதை உடன்

 

பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு மரியாதை உடன் பக்தர்கள் அஞ்சலியுடன் அவரது உடல் சித்தர் நல்லடக்கம் முறையில் மேற்கொள்ளப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதி சடங்கிற்கு வராத பிரமுகர்கள் தற்போது, நேரில் வந்து அவரது மகன்கள் அன்பழகன் மற்றும் செந்தில்குமாரை விசாரித்து  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 


திருமாவளவனுக்கு விபூதி வைத்துவிடும் பங்கார அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன்


 

அண்ணாமலை - திருமாவளவன் சந்திப்பு

 

இந்நிலையில் 23-10-2023 அன்று விடுதலை  சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில், வந்து பங்காரு அடிகளார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூஜைகள் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதனை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் அங்கு வருகை புரிந்ததை பார்த்து,  இருவரும் நேரில் பரஸ்பர நட்பு  பரிமாற்றம், சில வார்த்தைகள் பேசி  கொண்டனர். இதனைப் பார்த்த இரு கட்சியினரும் மகிழ்ச்சி கொண்டனர். இதை அரசியல் முன்னோட்டமாக சிலர் பார்க்கின்றனர்.



 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் தெரிவித்ததாவது: ஆன்மீகத் தளத்தில் சமூக நீதியை நிலைநாட்டிய அடிகளார் அவர்களின் மறைவு சமூக நீதியில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஒரு பேரிழப்பாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை கருவறைக்குள் அனுப்ப முடியும், பூஜை செய்ய முடியும் என சிந்தித்து அதை செயல்படுத்தி காட்டிய மகத்தான சமூக நீதி போராளியாக அடிகளாரை பார்க்கிறோம். மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டுக்கு வெளியே நிற்க வைக்கின்ற காலத்தில் கோயில் கருவறைக்குள் பெண்கள் எந்த காலத்திலும் பூஜை செய்யலாம் என்கின்ற என்பதை நடைமுறைப்படுத்தி காட்டியவர் அடிகளார். சமூக நீதிப் போராளியாகவே அடிகளாரை பார்க்கிறோம் அவருடைய மறைவு நாளில் என்னால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. இன்றைக்கு அவரது துணைவியார் அம்மாவையும் அவருடைய ஆன்மீக வாரிசுகளையும் நேரில் சந்தித்து எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன். பாலின சமத்துவத்துக்காக ஆன்மீகத் தளத்தில் அவர் ஆற்றிய பணிக்காக அஞ்சலி செலுத்துகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.