அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல உள்ளார். இதனையடுத்து இந்த பாதயாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள பிசிசி திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் சேலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.


முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை தொடங்குகிறார். காந்தி நினைவகத்தில் இந்த பாத யாத்திரை தொடங்குகிறது. அன்று இரவு நடக்கும் பொதுக் கூட்டத்தில் 5 லட்சம் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்துவதற்காக பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இந்திய பொருளாதாரம் படு பாதாளத்திற்கு சென்று உள்ளது. உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் போது விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் தருவோம் என்றும், நெல் கோதுமை கொள்முதல் விலை அதிகரிப்போம் என்றனர். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. இதையெல்லாம் பாதயாத்திரை மூலம் எடுத்துச் சொல்ல உள்ளோம்.



இந்த பாதயாத்திரை மூலம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். சகோதரத்துவம் ஏற்படும். வெறுப்பு பேச்சு இல்லாமல் போகும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம் தமிழக நிதி அமைச்சர் குறித்து கேட்டதற்கு, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் மிகவும் ஆணவத்தோடு பேசியுள்ளார். இது ஆர்எஸ்எஸ் கொள்கை பேச்சாகும். இதை கண்டிக்கிறோம். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரிக்கும் என பாரதிய ஜனதா தமிழக தலைவர் கூறினார். எதை வைத்து அவர் இப்படி கூறினார். இதற்கு உயர்நீதிமன்றம் எந்த அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என அமலாக்க துறைக்கு கேள்வி கேட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் தோழமைக் கட்சிகளை புறக்கணிப்பதாக தவறான தகவல்களை வருகின்றனர். இதில் உண்மை இல்லை. இது காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை எடுத்து அதை தலைவர் ராகுல் காந்தியிடம் கொடுத்து பின்னர் பாதயாத்திரை தொடங்கும்.



தமிழகத்தை சேர்ந்த மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் பாதயாத்திரையில் உடன் நடந்து செல்ல உள்ளனர். தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என கேட்டதற்கு, தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். இந்த ஒரு வருடத்தில் இயன்ற பணிகளை செய்து முடித்துள்ளார். இவ்வாறு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி பேட்டி அளித்தார். பேட்டியின் போது காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.பி.தங்கபாலு, இ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசு, சேலம் மாநகராட்சி துணை மையம் சாரதா தேவி மற்றும் திரளான தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.