சேலம் மாநகர் வளைகாபுரம் பகுதியில் உள்ள பாஜக கல்வியாளர்கள் பிரிவு அலுவலகத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது. "பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை நிகழ்ச்சி தமிழ்நாட்டில் 103 தொகுதிகளில் நிறைவடைந்துள்ளது. இந்த பாத யாத்திரை தமிழகத்தில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிற கட்சியைச் சேர்ந்த தலைவர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.


பாத யாத்திரை செல்லும் இடங்களில் இதுவரை எந்த வித அரசியல் கட்சியிலும் இல்லாத இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு இணையாக மகளிரின் ஆதரவும் அதிகரித்துள்ளது. புதிதாக வாக்காளர்கள் பட்டியலில் இணைந்துள்ள 60 சதவீத வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது பாதயாத்திரையின் மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.



பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அனைத்து தரப்பிலும் அதிகரித்து வருகிறது. வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் அளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் கோவிலுக்கு அருகிலேயே கடவுளை நம்புபவர் முட்டாள் என எழுதப்பட்டிருப்பதைத்தான் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது.


திருவிழா காலங்களில் கோவிலுக்கு அருகே நீண்ட வரிசையில் காத்திருக்கும்போது இதைபார்க்கும் பக்தர்கள் மனம் புண்படும் விதத்தில் இது அமைந்துள்ளது. பக்தர்கள் மனதை புண்படுத்தக்கூடாது என்ற நோக்கிலேயே இதை அகற்ற வேண்டும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் கடவுள் மறுப்பு வாசகங்கள் முழுமையாக அகற்றப்படும்.


பெரியாரின் மகளிர் உரிமை உள்ளிட்ட கொள்கைகள் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் கோவில்கள் முன்பு மட்டும் கடவுள் மறுப்புக் கொள்கை வாசகங்கள் இருப்பதை பாரதிய ஜனதாக் கட்சி ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையில் காவல்துறையினர் கவனம் செலுத்தாமல் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை கைது செய்வதில்தான் அக்கறை காட்டி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பங்களை நடவிடாமல் தடுப்பதையே போலீசார் முதல் பணியாக செய்து வருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.


பேட்டியின்போது, சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.