தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கடந்த 11ஆம் தேதி பிரதமர் மோடி இலவசங்கள் நாட்டு மக்களின் வரிப் பணத்தின் மீது உள்ள சுமை என்று கூறியிருந்தார். தேர்தலின் போது அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு பாஜக எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது என்று கூறப்பட்டது. 


இதன்காரணமாக இலவசங்கள் தொடர்பான விவாதம் அரசியல் கட்சிகள் இடையே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அதில், “நான் இந்த ரிவாரி விவாதம் தொடர்பாக மிகுந்த குழப்பத்தில் உள்ளேன். உத்தரபிரதேசம்,ஹரியானா,புதுச்சேரி உள்ளிட்ட முதலமைச்சர்களின் செயல்கள் பிரதமரின் நிலைப்பாட்டிற்கு எதிராக இல்லையா?






இல்லை ஒரு அரசுக்கு ஒரு விதியா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? அதாவது பாஜகவிற்கு ஒரு விதி, மற்ற கட்சிகளுக்கு வேறு ஒரு விதியா? அப்படி இல்லையென்றால் நான் செய்வதை செய்யாமல் நான் சொல்வதை செய்  என்று உள்ளதா” எனப் பதிவிட்டுள்ளார். 


அவருடைய பதிவில் உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் புதுச்சேரி அரசுகளின் அறிவிப்பை மேற்கோள் காட்டியுள்ளார். உத்தரபிரதேசத்த்தில் 60 வயது மேல் உள்ள பெண்களுக்கு இலவசமாக பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 11வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் நாட்டு மாடு இனத்தை வாங்குபவர்களுக்கு இலவசமாக 25 ஆயிரம் ரூபாய் மானியமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக கடந்த 11ஆம் தேதி பிரதமர் மோடி ஐஓசி எண்ணெய் நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில், “தேர்தலின் போது அறிவிக்கப்படும் இலவசங்கள் நம்முடைய நாட்டு மக்களின் வரி பணத்தின் மீது பெரிய சுமையாக அமைந்துவிடும். இலவசமாக பொருட்களை தருவது நல்ல கொள்கை அல்ல. அது நாட்டின் நலனிற்கு உகந்தது இல்லை. இது நாட்டின் வளர்ச்சியை பின் நோக்கி திரும்பி செல்ல வைக்கும் வகையில் அமைந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தார். அவர் கூறிய அந்த இலவசங்களுக்கு எதிரான கருத்திற்கு உகந்த படியாக பாஜகவின் முதலமைச்சர்கள் செயல்படவில்லை என்ற கேள்வியை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எழுப்பியுள்ளார். தேர்தல் இலவசங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.