கடந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம் என்றும் திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருப்பதாகவும் திமுகவின் முப்பெரும் விழாவில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


ஸ்டாலினின் மாஸ் உரை:


செப். 15ஆம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ஆம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவானதை இணைத்து பவள விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம்.


திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது. கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, சமூகநீதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாநிலத்தை முன்னேற்றியுள்ளோம் எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டது என்றால், இல்லை. ஆனால், எல்லா நெருக்கடிகளுக்கும் மத்தியில்தான் மாநிலத்தை முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் அரசு செயல்பட்டுவருகிறது. மாநில சுய ஆட்சி என்பது நம் உயிர்நாடி.


தொண்டர்களில் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால்தான் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது தமிழ்நாடும், திமுகவும் எனது இரு கண்கள் என செயல்பட்டுவரும் இந்நேரத்தில் பவள விழாவில் பங்கேற்பது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.


"நூற்றாண்டை நோக்கி முன்னேறுவோம்"


ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல. இதற்கு நமது அமைப்பு முறைதான் காரணம் என்பதை, நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேல். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக14 நாட்கள் அமெரிக்க பயணம், நானும் தம்பி டி.ஆர்.பி. ராஜாவும் சென்றோம்.


சென்றோம் என்று கூறுவதை விட, வென்றோம் என்றுதான் கூற வேண்டும். இந்த முதலீடுகள் மூலம் பல்லாயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன. எண்ணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு அமெரிக்க வாழ் மக்கள் கொடுத்த வரவேற்பு மறக்கவே முடியாது" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "எதிர்வரும் தேர்தலிலும் நமக்குத்தான் வெற்றி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன். திமுகவுக்கு தித்திக்கும் கொள்கை இருக்கு. கொள்கையை காக்கும் படையாக தொண்டர்கள் இருக்கிறார்கள்.


தொண்டர்களின் வீரத்தால் துணிச்சல் பெற்ற தலைமை இருக்கு. நூற்றாண்டை நோக்கி முன்னேறுவோம் நம்முடைய இலக்கு 2026 தேர்தல். இதுவரைக்கும், இப்படி ஒரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றது இல்லை என வரலாறு சொல்ல வேண்டும்" என்றார்.