மது ஒழிப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதை பாஜகவினர் விமர்சனம் செய்வதை மனிதநேய மக்கள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் M.H. ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


தமுமுக நிர்வாகி புதுமனை புகுவிழா 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த துளசேந்திரபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட கழக செயலாளர் சாதிக் பாட்ஷா இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் M.H. ஜவாஹிருல்லா கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;


செய்தியாளர்கள் சந்திப்பு


காவிரிப் படுகை டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பா பயிருக்கு தனியார் காப்பீட்டு நிறுவனம் வழங்கிய நிவாரணத்தில் நிறைய குறைகள் உள்ளதாக விவசாயிகள் முறையிட்டுள்ளனர். ஆகையால் பயிர் காப்பீட்டினை தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். 


வக்பு வாரியம் திருத்த மசோதா


ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரியம் திருத்த மசோதா குறித்து நாடு முழுவதும் பாராளுமன்ற கூட்டுக்குழு பயணம் செய்து கருத்துகளை கேட்டு வருகிறது. இதனிடையே வருகிற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது நடைமுறைக்கு முரணாக உள்ளது. தீய நோக்கத்தோடு இந்த சட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியா கூட்டணி முழு வீச்சில் எதிர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம். 




வலிமையான தமிழ்நாடு உருவாக பூரண மதுவிலக்கு வேண்டும் 


உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இது சரியான ஒரு முன்னெடுப்பாக நாங்கள் கருதுகிறோம். மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிராக தொடக்கம் முதல் போராட்டங்கள் முன்னெடுத்து வருகிறது‌. மது ஒழிப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதை பாஜகவினர் விமர்சனம் செய்வதை மனிதநேய மக்கள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. வலிமையான தமிழ்நாடு உருவாக வேண்டுமென்றால் பூரண மதுவிலக்கு தான் வழிவகுக்கும், அரசு இது குறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 


என்கவுண்டரை ஏற்றுக்கொள்ள முடியாது 


தமிழ்நாட்டில் தற்போது என்கவுண்டர் என்கின்ற மோதல் சாவுகளை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  எவ்வளவு பெரிய குற்ற வழக்கில் ஈடுபட்டு இருந்தாலும் அவரை நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தி, அவருக்கு எதிரான சாட்சிகளை நிரூபித்து உச்சபட்ச தண்டனையை வாங்கிக் கொடுப்பது என்பது கடமை. ஆனால், என்கவுண்டர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்களை, ஆயுதம் வைத்திருந்தார்கள், காவலர்களை தாக்கினர் என தற்காப்புக்காக சுட்டார்கள் என சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.  காவல்துறை கைது செய்து பிடியில் இருப்பவர்கள் கையில் ஆயுதம் எப்படி வந்தது? அதை வைத்து அவர்கள் காவலரை  தாக்கியதாக கூறுவது நம்பும் படியாக இல்லை.  பல்வேறு துறையில் முன்னோடியாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில், போலி என்கவுண்டர்கள் ஏற்கத்தக்க அல்ல. இதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைபாடு.  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருக்கக்கூடிய காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம்  என எதுவும் நடக்கக்கூடாது என்பதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்றார்.