காஞ்சிபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், விவசாய தின விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினார்.


ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள்


தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விவசாய தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜி.கே. மூப்பனாரின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தில் விவசாய தின திருவிழா நடைபெற்றது.


இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே .வாசன் டிராக்டர் வாகனத்தை ஓட்டியபடி இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக வந்தார். அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாட உற்சாக வரவேற்பினை தொண்டர்கள் வழங்கினர். 




பனை மரம் நடும் விழா..


பின்னர் அப்பகுதியில் இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில், நிலத்தில் இறங்கி நாற்று நட்டு , நாற்று நடும் பணியை துவக்கி வைத்தார். இதனை அடுத்து , நான்காயிரம் பனை விதைகள் மற்றும் பனை மரங்கள் நடும் பணியினை சிறுவர்களை வைத்து ஜி.கே.‌வாசன் துவக்கி வைத்தார்.




உணர்வுபூர்வமான விழா..


விழா மேடைக்குச் சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசனுக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து, வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி .கே. வாசன், இந்த விழா தனக்கு உணர்வுபூர்வமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஜி.கே. மூப்பனார் அவர்களின் பிறந்தநாளை விவசாயி தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகிறோம்.




 


கூட்டணியில் ஆளப்போகின்ற கட்சி..


இந்த விழாவை பார்க்கும் பொழுது ஆளுகின்ற கட்சி அரசு சார்பில் நடைபெறுகிற விழா என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலர் எதிர்க்கட்சி நடத்தும் விழா என நினைத்துக் கொள்வார்கள். நாம் ஆண்ட கட்சியும் அல்ல, ஆளுகின்ற கட்சியும் அல்ல, இந்த விவசாய தின விழா மூலம் ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.


ஆண்ட கட்சியும் அல்ல ஆளுகின்ற கட்சியும் அல்ல, ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் ஆளப்போகின்ற கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்ற உணர்வை நம்முடைய காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்தார் .


 




விவசாயிகளுக்கு விருது


இதனைத் தொடர்ந்து சிறப்பாக விவசாய பணிகளை மேற்கொண்டு வரும், 12 விவசாயிகளுக்கு "பசுமை காப்பாளர்". விருது வழங்கி கௌரவித்தார். மேலும் எட்டு விவசாயக் குழுக்களுக்கு சுமார் 35 ஆயிரம் மதிப்புள்ள , விவசாய இடுபொருட்களை வழங்கினார்.‌ தொடர்ந்து ஐம்பதற்கும் மேற்பட்ட விவசாய மக்களுக்கு விவசாய சார்ந்த கருவிகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் , தென்னை மரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 




இந்த விழாவிற்கான ஏற்பாட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.